லோக்சபாவில் நிறைவேறியது ஆதார் மசோதா: ராஜ்யசபாவில் பரிந்துரைத்த திருத்தங்கள் நிராகரிப்பு
டெல்லி: ஆதார் மசோதாவிற்கு லோக்சபா ஒப்புதல் வழங்கியது. இந்த மசோதாவில் ராஜ்யசபா பரிந்துரைத்த 5 திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டது.
ஆதார் எண்ணை கட்டாயமாக்கவும், அரசு மானியங்களை பொது மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் வகையிலும் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஆதார் மசோதா மக்களவையில் கடந்த 11-ம் தேதி நிதி மசோதாவாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மசாதோவை அறிமுகம் செய்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பேசியதாவது: அரசின் மானியங்கள் தேவைப்படுவோருக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாலே நாடாளுமன்றம் தனது சட்டம் இயற்றும் கடமையிலிருந்து பின்வாங்க முடியாது.
இது தவிர முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த மசோதாவைவிட, தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவில் தனிநபர் ரகசியங்களை பாதுகாப்பதற்கு தேவையான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்றார். பெரும்பாலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதார் மசோதா, பண மசோதாவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த ஜேட்லி, மசோதாவை எந்த பிரிவின் கீழ் தாக்கல் செய்வது என்பது மக்களவை சபாநாயகரின் தனிப்பட்ட உரிமையாகும். மேலும், அரசு மானியங்கள் ஆதார் அட்டையின் கீழ் வழங்கப்படவிருப்பதாலேயே இது பண மசோதாவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டது என்றார்.
எனினும், இந்த மசோதாவில் ஐந்து திருத்தங்கள் மேற்கொள்வதற்கு காங்கிரஸ் உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மக்களவைக்கு அனுப்பப்பட்டது.
இதையடுத்து திருத்தங்களுடன் கூடிய மசோதாவை மக்களவையின் ஒப்புதலுக்காக அனுப்பியது. ஆனால், திருத்தங்களை மக்களவை நிராகரித்தது. பின்னர் முந்தைய வடிவிலேயே மசோதா நிறைவேற்றப்பட்டது.
பொதுவாக ஒரு மசோதா சட்டமாக வேண்டுமெனில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலையும் பெற வேண்டும். ஆனால், பண மசோதாவாக அறிமுகம் செய்யப்படும் மசோதாவுக்கு மக்களவையின் ஒப்புதல் கிடைத்தாலே போதுமானதாகும். இதையடுத்து மக்களவை ஏப்ரல் 25-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.