ரேஷன் பொருட்கள் வாங்க "ஆதார்" கட்டாயம்.. ஜூன் 30க்குள் வாங்க மத்திய அரசு அறிவுறுத்தல்
ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி: ரேசன் கடைகளில் பொருட்களை வாங்க ஆதார் அட்டை எண் அவசியம் என மத்திய அரசு அறிவி்த்துள்ளது. ஆதார் அட்டை எண் இல்லாதவர்கள் ஜுன் 30-ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
பண பரிவர்த்தனைகள் உட்பட அனைத்திற்கும் மத்திய அரசு ஆதார் எண்ணை கட்டாயமாக்கி வருகிறது. அந்த வகையில் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கவும் மத்திய அரசு ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் சலுகைகளை பெற குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி ரேசன் பொருட்களை வாங்க ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் ரேசன் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களுக்கான மத்திய அரசின் மானியம், சமையல் எரிவாயுவுக்கு வழங்கப்படுவது போல வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதற்காக ரேஷன் அட்டைகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் சலுகைகளை பெற ஜுன் 30-க்குள் குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் ஆதார் அட்டை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.