ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்க காலக்கெடு நீட்டிக்கப்படும்: மத்திய அரசு
டெல்லி: வங்கி கணக்கு உள்ளிட்டவையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடுவை நீட்டிக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.
வங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்து சேவைகளுடன் ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31ம் தேதி தான் கடைசி நாள் என்று மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில் மத்திய அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தின் அரசியல்சாசன அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் கூறியதாவது, வங்கி கணக்கு உள்ளிட்டவையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு ஏற்கனவே நீட்டித்தது.
தேவைப்பட்டால் மறுபடியும் நீட்டிக்கும் என்று அவர் தெரிவித்தார். ஆதார் எண்ணை வங்கி கணக்கு உள்ளிட்டவையுடன் இணைக்கச் சொல்வது மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர் தரப்பில் இதுவரை 3 வழக்கறிஞர்கள் வாதாடியுள்ளனர். மேலும் 5 வழக்கறிஞர்கள் இனி வாதாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.