பயணிகளுக்கு நற்செய்தி.. ரூபாய் நோட்டுக்கள் மாற்ற, ஏர்போர்ட்டுகளில் சிறப்பு மையங்கள்
விமானப் பயணிகளின் வசதிக்காக செல்லாத ரூபாய் நோட்டுக்களை மாற்ற நாட்டுடமையாக்கப்பட்ட வணிக வங்கிகள் விமான நிலையங்களில் சிறப்பு மையங்களை அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: விமான நிலைய நுழைவு வாயில்களில் நாட்டுடமையாக்கப்பட்ட வணிக வங்கிகள் சிறப்பு மையங்களை அமைத்து விமானப் பயணிகளுக்கு ரூபாய் நோட்டுக்கள் மாற்றிக் கொடுக்க விமான நிலைய ஆணையம் அனுமதி அளித்து வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள சிரமத்தைப் போக்கவும் விமானப் பயணிகள் பயன்பெறும் வகையிலும் இந்த சிறப்பு மையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டுக்கள் மாற்றுவதற்கான இந்த வங்கி சிறப்பு மையங்கள் வருகிற டிசம்பர் 31-ஆம் தேதி வரை தற்காலிகமாக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விமானப் பயணிகள் ரூபாய் நோட்டுக்கள் மாற்றி பயன்பெறும் வகையில் நாட்டுடமையாக்கப்பட்ட எந்த ஒரு வங்கியும் தங்களது சிறப்பு மையங்களை தற்காலிகமாக அமைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய ஆணையம் கூறியுள்ளது.
இருப்பினும், கூட்டாண்மை நிறுவன அடிப்படையில் செயல்படும் விமான நிலையங்களில் இந்த சிறப்பு மையங்களை அமைக்க இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏற்கனவே போதிய வங்கிக் கிளைகள் உள்ளதால் சிறப்பு மையங்கள் அமைக்க அவசியம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
விமான நிலையங்களில் வாகன நிறுத்தக் கட்டணம் வருகிற 21-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
ஏற்கனவே, தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் நவ.18-ம் தேதி வரை வசூலிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரயில்வே துறையும் பயணிகள் டிக்கெட் புக்கிங் செய்ய பழைய ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.