பி.கே. படத்தை விளம்பரப்படுத்த ஐஎஸ்ஐயுடன் கைகோர்த்த ஆமீர்: சு. சாமி குண்டு
டெல்லி: பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தனது பி.கே. படத்தை விளம்பரப்படுத்த பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் சேர்ந்து பணியாற்றியதாக பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி பாலிவுட் நடிகர் ஆமீர் கானை கடுமையாக சாடி பேட்டி அளித்துள்ளார். பேட்டியின்போது அவர் கூறுகையில்,
ஆமீர் கான் கூறியதற்கு எல்லாம் நான் முக்கியத்துவம் அளிக்கவில்லை. அவர் தனது பி.கே. படத்தை விளம்பரப்படுத்த பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயுடன் சேர்ந்து பணியாற்றினார் என்பது மட்டும் எனக்கு நன்கு தெரியும்.
இது குறித்து அவர் இன்னும் விளக்கம் அளிக்காமல் உள்ளார். ஆமீர் கான் தனது மனைவி இந்தியாவில் பாதுகாப்பாக உணரவில்லை என்று கூறுவது சரி இல்லை. அவரது மனைவி பாதுகாப்பாக உணராவிட்டால் நாட்டை விட்டு வெளியேறட்டும் என்றார்.
நாட்டில் சகிப்புத்தன்மை இல்லாமல் உள்ளது. நாம் நாட்டை விட்டு வெளியேறிவிடலாமா என்று தனது மனைவி கிரண் ராவ் தன்னிடம் கேட்டதாக ஆமீர் கடந்த நவம்பர் மாதம் தெரிவித்தார். அதில் இருந்து பாஜக தலைவர்கள் அவரையும், அவரது மனைவியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
மேலும் வியத்தகு இந்தியா விளம்பர தூதர் பணியில் இருந்து ஆமீர் அண்மையில் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.