ஆமிர் நீங்க பேசுறது தப்பு, இந்தியாவில் முஸ்லீம்கள் பாதுகாப்பாகவே உள்ளனர்- பெங்களூரு இமாம்
பெங்களூரு: இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லை என்று நடிகர் ஆமிர்கான் கூறியுள்ளது தவறு. இந்தியாவில் முஸ்லீம்கள் பாதுகாப்பாகவே உள்ளனர் என்று பெங்களூரு ஜும்மா மசூதி இமாம் முகம்மது மக்சூத் இம்ரான் கூறியுள்ளார்.
இந்தியாவில் கடந்த 8 மாதங்களில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டது. இது கவலை தருகிறது என்று ஆமிர்கான் கூறியுள்ளார். மேலும் நாட்டை விட்டே வெளியேறி விடலாமா என்று தனது மனைவி தன்னிடம் கேட்டதாகவும் அவர் கூறியிருந்தார். இது விவாதங்களை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து பெங்களூரு இமாம் முகம்மது மக்சூத் இம்ரான் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஒன்இந்தியாவிடம் கூறியதாவது:
முஸ்லீம்கள் பாதுகாப்பாகவே உள்ளனர்
இந்தியாதான் முஸ்லீம்களுக்குப் பாதுகாப்பான நாடு. இங்கு அவர்கள் பாதுகாப்பாகவே உள்ளனர். இங்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அப்படியே பிரச்சினை வந்தாலும் அதை சந்தித்து தீர்வு காண வேண்டுமே தவிர நாட்டை விட்டு ஓடுவது பிரச்சினைக்குத் தீர்வாகாது.
ஆமிர் பேச்சு சரியில்லை
ஆமிர் கான் பேச்சு தவறு. அதை நான் ஏற்கவில்லை. இது அவருடைய நாடு. அவர் இங்குதான் பிறந்தார். இங்குதான் வளர்ந்தார். அதை விட இந்த நாட்டில் அவர் நன்றாகவே அனுபவித்து வருகிறார். காரணம் இது இந்தியா.
பிரச்சினை வந்தால் சமாளியுங்கள்
பிரச்சினை வருகிறதா. வந்தால் அதை சமாளியுங்கள். பிரச்சினை இருப்பதாக உணர்ந்தால் அதை ஒரு இந்தியராக அவர் சந்தித்து தீர்வு காண வேண்டும். அதைச் சரி செய்ய முயற்சிக்க வேண்டும்.
வரலாற்றில் முஸ்லீம்கள்
ஒவ்வொரு இந்தியருக்கும் இந்த நாட்டைக் காக்கும் கடமை உண்டு. முஸ்லீம்களுக்கு இந்திய வரலாற்றில் முக்கிய இடம் உண்டு. சிலர் இதை மாற்ற நினைக்கலாம். ஆனால் அவர்கள் "சிறுபான்மையினர்". அவர்களைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.
ஒரு முஸ்லீமின் கடமை
ஒரு முஸ்லீமாக, இந்த நாட்டில் பிறந்து வளர்ந்த முஸ்லீமுக்கு இந்த நாட்டைக் காக்கும் கடமை உள்ளது. இந்த நாட்டுக்காக ரத்தம் சிந்த வேண்டிய நிலை வந்தாலும் அதை நாம் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.
பொறுப்பு தேவை
ஆமிர்கான் ஒரு மிகச் சிறந்த நடிகர், பிரபலமான நடிகர். எனவே அவர் பேசும்போது மிகவும் பொறுப்பாக பேச வேண்டும். இதுமாதிரியான பேச்சுக்கள் பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது. தப்பி ஓடுவது கோழைகளின் செயலாகும். அதுபோன்ற பேச்சுக்கள் நாட்டில் பிளவையே ஏற்படுத்தும். இதை விட நாட்டில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் வேறு நிறைய உள்ளது.
நான் பாதுகாப்பாகவே உணர்கிறேன்
நான் இந்தியாவில் பாதுகாப்பற்றதாக உணரவில்லை. பாதுகாப்பாகவே இருக்கிறேன். எந்த நாட்டில்தான் பிரச்சினை இல்லை. அத்தனை பேரும் ஓடிக் கொண்டா இருக்கிறார்கள். ஒற்றுமையை சீர்குலைக்கவும், அமைதியை சீர்குலைக்கவும் சிலர் இருக்கத்தான் செய்வார்கள். ஆனால் பொறுப்பான குடிமக்களாக, நாம் அது நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்றார் இம்ரான்.
ஐஎஸ்ஐஎஸ்ஸுக்கு எதிரானவர்
இம்ரான், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருபவர். கர்நாடகத்தில் இந்த அமைப்பு ஊடுறுவி விடாமல் தடுக்க வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்தவர். வெள்ளிக்கிழமை மசூதிகளில் நடைபெறும் தொழுகையின்போது, ஐஎஸ் இயக்கத்தின் சுயரூபத்தை விளக்கி அதுகுறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டவர் இம்ரான். கர்நாடகத்தில் உள்ள மசூதி்கள் கிட்டத்தட்ட அனைத்துமே இம்ரானின் உத்தரவைப் பின்பறுறுகின்றன. இதற்காக பல்வேறு தரப்பிலிருந்தும் இம்ரானுக்கு பாராட்டுகள் குவிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.