ஷாருக்குக்கு முடிந்தது.. அமீர்கானுக்கு சிகிச்சை விரைவில்- பாஜக ராம் மாதவ் மிரட்டல்!
டெல்லி: சகிப்புத்தன்மை குறித்து கருத்து கூறிய ஷாருக்கானுக்கு சிகிச்சை முடிந்துவிட்டது. அடுத்து அதே விவகாரத்தில் கருத்து தெரிவித்த அமீர்கானுக்கு சிகிச்சை காத்திருக்கிறது என்று பாஜக தலைவர்களில் ஒருவரான ராம் மாதவ் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதால் நாட்டை விட்டு வெளியேறிவிடலாமா என்று தனது மனைவி கேட்டதாக பாலிவுட் நடிகர் அமீர்கான் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார்.
இவ்விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிவந்த நிலையில், டெல்லியின் எஸ்.ஜி.பி.டி கல்லூரியில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பா.ஜ.க தலைவர் ராம் மாதவ், "இந்தியாவின் கவுரவம் குறித்து தான் நடித்த விளம்பரப் படத்தில் ஆட்டோ ஓட்டுநருக்கு அறிவுரை கூறுவதைப் போல் தனது மனைவிக்கும் அமீர்கான் எடுத்துக்கூற வேண்டும்" என்று கூறி அதனை மீண்டும் புகைவர வைத்துள்ளார்.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மூத்த பா.ஜ.க தலைவர் கைலாஷ் விஜய் வர்கியா, "சமூகத்தில் சகிப்பின்மை அதிகரித்து வருகிறது என்று யாராவது கூறினால் உடனே அது எனக்கு கொஞ்சம் கோபத்தை ஏற்படுத்தி விடுகிறது. அவர்களுக்கு நிச்சயமாக சிகிச்சை தர வேண்டும்.
அவர்களுக்கு அளிக்கும் சிகிச்சை மிக அவசியமானதும் கூட. இந்த விஷயத்தில் ஒருவருக்கு சிகிச்சை முடிந்து விட்டது. இன்னொருவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நேரம் இது. இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்" என்று மிரட்டலாக பேசியுள்ளது சர்ச்சையை கொழுந்து விட்டு எரிய வைத்துள்ளது.
ஏற்கனவே சகிப்புத் தன்மை விவகாரத்தில் சிக்கியதால் ஷாருக்கானின் தில்வாலே திரைப்படம் வெளிவருவதில் பெரும் பிரச்சினைகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.