சல்மான் குர்ஷித்துக்கு எதிரான ஆம் ஆத்மி வேட்பாளர் முகுல் திரிபாதி திடீர் விலகல்!
பரூக்காபாத்: லோக்சபா தேர்தலில் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்தை எதிர்த்து போட்டியிடுவார் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருந்த வேட்பாளர் முகுல் திரிபாதி திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி கடந்த பிப்ரவரி மாதம் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. 20 பேர் கொண்ட அந்த பட்டியலில் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்தை எதிர்த்து முன்னாள் பத்திரிகையாளர் முகுல் திரிபாதி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது முகுல் திரிபாதி தாம் போட்டியிட விரும்பவில்லை என்று கட்சி தலைமைக்குத் தெரிவித்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்த ஆம் ஆத்மி நிர்வாகிகள், முகுல் திரிபாதி தேர்தல் பிரசாரத்தில் ஆர்வம் காட்டவில்லை. அதனால் அவரை மாற்றுவது குறித்து ஆம் ஆத்மி ஆலோசித்து வருகிறது என்று மட்டும் கூறியுள்ளனர். திரிபாதியின் இந்த முடிவு ஆம் ஆத்மி கட்சிக்கு நெருக்கடியாகவும் கருதப்படுகிறது.