இரும்புக் கம்பிகளால் பயங்கரமாக தாக்கப் பட்ட ஆம் ஆத்மி வேட்பாளர்... காருக்கும் தீ வைப்பு
டெல்லி: பீகாரில் ஆம் ஆத்மி வேட்பாளர் வந்த காரை வழிமறித்த மர்மகும்பல், காருக்கு தீவைத்து வேட்பாளரை இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீப காலமாக தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியினர் தாக்கப் பட்டு வருகின்றனர். கட்சி ஆரம்பித்த ஓராண்டிற்குள் டெல்லியில் ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு மக்களிடையே செல்வாக்கு பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் தொடர் நடவடிக்கைகளால் மக்கள் அக்கட்சி மீது கோபத்தில் உள்ளனர். சமீப காலமாக அக்கட்சியினர் தொடர்ந்து தாக்கப் பட்டு வருவது இதனை உண்மை என காட்டுவது போல் அமைந்துள்ளது.
இந்நிலையில் நேற்று மத்திய பிரதேசத்தில் ஆம் ஆத்மி தலைவர் ஷாஷியா இல்மி மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. மன்சார் - நீமக் லோக்சபா தொகுதியில் வாக்கு சேகரித்த போது, மோடி குறித்து அவர் பேசியதால் ஆத்திரமடைந்த தொண்டர் ஒருவர் இல்மி மீது கல்வீசித் தாக்கினார். மற்ற ஆம் ஆத்மி தொண்டர்களும் போலீசாரும் அவரை பிடிப்பதற்குள் அவர் தப்பி விட்டதாக கூறப்படுகிறது.
அந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்னதாகவே பீகார் மாநில வேட்பாளர் பிரனாவ் பிரகாஷ் மர்ம நபர்களால் இரும்பு கம்பிகள் கொண்டு பயங்கரமாகத் தாக்கப்பட்டுள்ளார்.
பீகார் மாநிலத்தின் நாலந்தா லோக்சபா தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளராக பிரனவ் பிரகாஷ் போட்டியிடுகிறார். வரும் ஏப்ரல்17 ஆம் தேதி அங்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உதர்பூ பகுதியில் பிரகாஷ் வாக்கு சேகரித்து வந்தார். அப்போது அங்கு வந்த 25 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அவரது காரை வழிமறித்து நிறுத்தி காரின் ஜன்னல்களை உடைத்து காருக்கு தீ வைத்தது.
அதனைத் தொடர்ந்து மர்ம நபர்களின் வெறிச்செயலை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த பிரகாஷையும் அவர்கள் இரும்புத் தடியால் தாக்கத் தொடங்கினர்.இதனால் பலத்த காயமடைந்த பிரகாஷை உடனடியாக தொண்டர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பிரகாஷ் தாக்குதல் தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘லத்தியால் அவர்கள் என்னை அடித்தனர், இதில் எனக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது' என்றார்.
இதற்கிடையே நலாந்தா தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார் தேர்தல் ஆணைய அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட அக்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.