எங்களுக்கு நியாயம் உங்களுக்கு ஒரு நியாயமா? - தகுதிநீக்கம் தொடர்பாக போர்க்கொடி தூக்கும் ஆம் ஆத்மி
பாரதிய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் எல்லாம் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் இரட்டை ஆதாய பதவி வகிக்கிறார்கள் என ஆம் ஆத்மி குற்றம் சாட்டி உள்ளது
டெல்லி: 20 எம்எல்ஏக்களை பதவிநீக்கம் செய்தது போல மத்திய பிரதேசத்தில் உள்ள 116 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யுங்கள் என ஆம் ஆத்மி கட்சி போர்க்கொடி உயர்த்தியுள்ளது.
இரட்டை ஆதாய பதவி விவகாரத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். எம்.எல்.ஏ.க்கள் 20 பேரது பதவியை பறிக்க கோரிய தேர்தல் கமிஷன் சிபாரிசுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இதனை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில் இரட்டை ஆதாய பதவி வகிக்கும் பாஜக எம்எல்ஏக்கள் குறித்த தகவல்களை ஆம் ஆத்மி கட்சி தயாராகி வருகிறது. இதேபோன்று பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஒன்றான மத்திய பிரதேசத்திலும் இரட்டை ஆதாய பதவியை வகிக்கும் 116 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என ஆம் ஆத்மி வலியுறுத்தி உள்ளது. மொத்தம் 230 உறுப்பினர்கள் கொண்ட மத்திய பிரதேசத்தில் பாரதீய ஜனதாவின் பலமானது 165 ஆக உள்ளது.
மேலும் இந்திய அரசியலமைப்பு மற்றும் மக்கள் பிரதிநிதி சட்டத்தின் கீழ் பாஜக கட்சியை சேர்ந்த 116 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம் ஆத்மி வலியுறுத்தி உள்ளது. இவர்களுடன் காங்கிரஸ் கட்சியும் இணைந்துள்ளதால், தற்போது பாஜகவுக்கு சிக்கல் அதிகரித்துள்ளது. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தை குறிப்பிட்டு சத்தீஷ்கரிலும் 11 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.