உடைந்த ஆம் ஆத்மி.. உருவாகும் புதிய கட்சி.. கை கோர்க்கும் யோகேந்திரா, பிரசாந்த், மேதாபட்கர்?
டெல்லி: அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆதிக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது. ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்களான பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் உள்ளிட்டோர் விரைவில் தனிக்கட்சி தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
டெல்லி சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத வெற்றியைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது ஆம் ஆத்மி. டெல்லி முதல்வராக அரவிந்த் கேஜ்ரிவால் பொறுப்பேற்றாலும் ஆம் ஆத்மி கட்சியில் அவரே ஆதிக்கம் செலுத்துகிறார் என்பது அதிருப்தியாளர்கள் புகார்.
இந்த புகார் கலகக் குரலாக வெடித்து கட்சியில் பிளவையே உருவாக்கி விட்டது. ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்களான பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் அண்மையில் கட்சியின் தேசிய செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதற்கு எதிராக மேதா பட்கர் உள்ளிட்ட பல தலைவர்கள் ஆம் ஆத்மியில் இருந்து விலகி வருகின்றனர். இதுதான் சந்தர்ப்பம் என நினைத்து ஆம் ஆத்மி கட்சிப் பொறுப்பில் அதிருப்தியாளர்களை கழற்றிவிட்டு தமது ஆதரவாளர்களை நியமித்தார் அரவிந்த் கேஜ்ரிவால்.
இந்நிலையில் அதிருப்தியாளர்களை ஒருங்கிணைக்கும் பணியில் பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அனேகமாக ஏப்ரல் 14-ந் தேதி அம்பேத்கர் பிறந்த நாளில் புதிய கட்சிக்கான அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.