மக்கள் பணியாற்றுவதில் ஆம் ஆத்மி தோல்வி: இது காங்கிரஸ் தவறு இல்லை - ஷிண்டே
சோலாபூர்: கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, டெல்லியில் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வில்லை, அதற்கு காங்கிரஸ் பொறுப்பல்ல என மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்தாண்டு நடைபெற்ற டெல்லி சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் ஆதரவோடு டெல்லியில் ஆட்சி அமைத்தது ஆம் ஆத்மி கட்சி. அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வரானார்.
ஆட்சியில் அமர்ந்ததும் பல அதிரடி முடிவுகளை எடுத்த கெஜ்ரிவால், லோக்பால் மசோதா பிரச்சினையில் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் சோலாபூரில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவிடம் இது குறித்துக் கேட்கப் பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலாவது :-
"டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது. ஆனால் ஆம் ஆத்மி டெல்லி மக்களின் பிரச்சனைகளை தீர்க்க கிடைத்த நல்ல வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை. இது காங்கிரஸ் கட்சியின் தவறு இல்லை" எனத் தெரிவித்தார்.
மேலும், டெல்லியில் கேஸ் விலை உயர்வு குறித்து முகேஷ் அம்மானி உள்ளிட்டோர்களுக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘டெல்லி போலீசார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்' எனப் பதிலளித்தார் ஷிண்டே.