பெரும்பான்மையை இழந்தது ஆம் ஆத்மி அரசு... ஆதரவை வாபஸ் பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.!
டெல்லி: ஆம் ஆத்மி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சுயேட்சை எம்.எல்.ஏ. ராம்பீர் ஷோகீன் வாபஸ் பெற்றுள்ளார். இதன் மூலம் டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மி அரசு தனது பெரும்பான்மையை இழந்துள்ளது.
நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் அதிக இடங்களைப் பெற்ற பாஜக ஆட்சி அமைக்க மறுத்ததைத் தொடர்ந்து, இரண்டாவது இடத்தில் இருந்த ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் ஆதரவுடன் டெல்லியில் ஆட்சி அமைத்தது.
இந்நிலையில் ஆம் ஆத்மி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக சுயேட்சை எம்.எல்.ஏ.வான ராம்பீர் ஷோகீன் அறிவித்துள்ளார். இன்று மாலை டெல்லி துணைநிலை கவர்னர் நஜீப் ஜங்கை சந்தித்து அவர் தனது ஆதரவை வாபஸ் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே, தேர்தல் சமயத்தில் ஆம் ஆத்மி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஆட்சியில் அமர்ந்த பின் மறந்து பின்வாங்குகிறது என குற்றம்சாட்டியிருந்தார் ராம்பீர் ஷோகீன்.
சுயேட்சை எம்.எல்.ஏ. அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதால் 70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மி அரசு தனது பெரும்பான்மையை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.