ஆஆ.. குவிகிறது நிதி... தொண்டர்களும் குவிகிறார்கள்.. இன்போசிஸ் பாலகிருஷ்ணனும் இணைந்தார்!
டெல்லி/பெங்களூர்: ஆம் ஆத்மி கட்சிக்கு தொண்டர்கள் பலம் கூடி வருகிறது. அதேபோல, பெருமளவில் நிதியும் கட்சிக்கு வந்து கொண்டிருக்கிறதாம்.
நாடு முழுவதும் இக்கட்சியில் இணையவும், இக்கட்சியுடன் இணைந்து செயல்படவும் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் கட்சிக்கு நிதியளிப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர்.
பலர் தாங்கள் பார்த்து வரும் பெரும் சம்பளத்துடன் கூடிய வேலைகளைக் கூட விட்டு விட்டு கட்சியில் சேர ஆர்வம் தெரிவித்துள்ளனராம்.
வெற்றிக்குப் பின் வேகம் கூடும் ஆம் ஆத்மி
டெல்லி சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை. ஆனால் ஆம் ஆத்மி கட்சி படு வேகமாக வளரத் தொடங்கி விட்டது. அலைகளைப் பரப்பியடிக்கத் தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் ஆர்வம்
நாடு முழுவதும் இக்கட்சியின் கிளைகளைத் தொடங்கவும், அதில் இணையவும் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனராம். பலர் நிதியளிக்கவும் ஆர்வம் காட்டுகின்றனராம்.
வடக்கு முதல் தெற்கு வரை
ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து செயல்படும் ஆர்வம் வடக்கு முதல் தெற்கு வரை ஏகோபித்ததாக இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
இணைந்த இன்போசிஸ் பாலகிருஷ்ணன்
இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் அதன் போர்டு உறுப்பினரான வி.பாலகிருஷ்ணன். இவர் கடந்த மாதம் திடீரென ராஜினாமா செய்தார். ஆனால் தற்போது இவர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்திருக்கிறார்.
கட்சியில் இணைந்த வங்கித் தலைவர்
அதேபோல மும்பையில் உள்ள ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்தின் தலைவராக இருந்து வந்தவரான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவரான மீரா சன்யாலும், வங்கித் தலைவர் பதவியிலி்ருந்து விலகி, ஆம் ஆத்மியில் இணைந்துள்ளார்.
சாஸ்திரி பேரனும் வந்தார்
அதேபோல லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் ஆதர்ஷ் சாஸ்திரியும் தற்போது கேஜ்ரிவால் பக்கம் வந்துள்ளார். இவர் ஆப்பிள் நிறுவனத்தின் மேற்கு இந்தியப் பிரிவின் விற்பனைத் தலைவராக இருந்தவர்.
ஆன்லைனில் குவியும் நிதி
அதேபோல ஆம் ஆத்மி கட்சிக்கு பலரும் தாராளமாக நிதியுதவி அளிக்கின்றனராம். ஆன்லைன் மூலம் நேற்று புத்தாண்டு தினத்தில் மட்டும் ரூ. 41 லட்சம் வசூலாகியுள்ளதாம். ஏற்கனவே சாந்தி பூஷன் என்பவர் ரூ. 1 கோடி நிதியளித்துள்ளார். சிங்கப்பூரைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு இந்தியர் ரூ. 50 லட்சம் அளித்துள்ளார்.
டிசம்பர் 13 முதல் நிதி வசூல்
தேர்தலுக்கு முன்பு வரை தினசரி ரூ. 6 முதல் 7 லட்சம் வரை வசூலாகி வந்ததாம் கட்சிக்கு. கட்சியின் நிதியிருப்பு ரூ. 20 கோடியைத் தொட்டதும் நிதி வசூலை நிறுத்தியது ஆம் ஆத்மி. தற்போது டிசம்பர் 13ம் தேதி முதல் மீண்டும் நிதி வசூலை தொடங்கியுள்ளனர். லோக்சபா தேர்தல் செலவுகளைக் கருத்தில் கொண்டு மீண்டும் நன்கொடைகளைப் பெறத் தொடங்கியுள்ளதாம் கட்சி.
எதிர்பார்ப்புகள் நிறைய
ஆம் ஆத்மி கட்சியைப் பொறுத்தவரை மக்களின் எதிர்பார்ப்பு மிகப் பெரிதாக உள்ளது. அதை எப்படி இக்கட்சி நிறைவேற்றப் போகிறது என்பதில்தான் அதன் எதிர்காலமும், வளர்ச்சியும் அடங்கியிருக்கிறது.