கேரள நர்ஸ்கள் குறித்த பேச்சு: ஆம் ஆத்மி கட்சி தலைவர் குமார் மன்னிப்பு கேட்டார்
கொச்சி: கேரள நர்ஸ்கள் பற்றி தான் கூறிய கருத்துக்கு ஆம் ஆத்மி கட்சி தலைவர் குமார் விஷ்வாஸ் மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஆத் ஆத்மி கட்சி தலைவர் குமார் விஷ்வாஸ் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முன்பு நர்ஸ்கள் என்றாலே ஆண்களுக்கு சந்தோஷமாக இருந்தது. அதற்கு காரணம் அவர்கள் பெரும்பாலும் கேரளாவில் இருந்து தான் வந்தனர். கேரள நர்ஸ்கள் கருப்பானவர்கள். இதனால் அவர்களை சிஸ்டர் என்று கூப்பிட்டனர். இந்தப் பெண்களில் பலர் தங்களது ஃபேஸ்புக்கில் படங்களைக் கூட போட மாட்டார்கள். ஆனால் இப்போது வட இந்திய நர்ஸ்கள் வந்து விட்டனர். அவர்கள் கவர்ச்சிகரமாக இருக்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.
இதை அவர் கூறியது கடந்த 2008ம் ஆண்டு ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சியில். அது தற்போது சமூக வலைதளங்களில் அப்லோட் செய்யப்பட்டுள்ளது. இதை பார்த்த கேரளா மக்கள் கொதித்துவிட்டனர். குமார் தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்கக் கோரி கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில் குமார் தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
நான் கவி சம்மேளன் நிகழ்ச்சியில் பேசிய பழைய வீடியோவை பார்த்து கேரளாவில் உள்ள எனது நண்பர்கள் பலரின் மனம் புண்பட்டுள்ளது என்று கேள்விப்பட்டேன். நான் யார் மனதையும் வேண்டும் என்றே புண்படுத்தியதில்லை. மதம், பகுதி, ஜாதி அடிப்படையில் பிரிவினை ஏற்படுத்துவதை விரும்புபவன் நான் அல்ல.
இருப்பினும் எனது வார்த்தைகள் யார் மனதையாவது காயப்படுத்தி இருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.