சர்ச்சையில் சிக்கி பதவியை பறிகொடுத்த ஆம்ஆத்மி அமைச்சர்கள் !
டெல்லி: டெல்லியில் ஆம்ஆத்மி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் அமைச்சர்களை களை எடுப்பதிலும் கெஜ்ரிவால் தவறுவதில்லை.
அந்த வகையில் சட்டப்படிப்பு படித்ததாக போலி சான்றிதழ் சமர்ப்பித்த வழக்கில் டெல்லி மாநில சட்ட அமைச்சராக ஜிதேந்தர் தோமர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவரது பதவியை ராஜினாமா செய்தார்.
அதைத்தொடர்ந்து ஆம்ஆத்மி அரசில் உணவுத்துறை அமைச்சராக இருந்து வந்தவர் ஆஷிம்கான். இவர் உணவுத்துறையில் சிலருக்கு கான்ட்ராக்ட் விட்டதில் சிலருடன் பேரம் பேசியதாக புகார் எழுந்தது. இது குறித்த எழுத்துப்பூர்வமான குற்றச்சாட்டு மற்றும் ஒரு மணி நேரம் ஓடும் ஆடியோ டேப் ஒன்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கவனத்துக்கு வந்தது.
இதனையடுத்து இந்த தகவல் வெளியே பரவும் முன்னதாக தாமே முன்வந்து அமைச்சரை நீக்குவதாக பத்திரிகையாளர்களை கூட்டி அறிவித்தார் கெஜ்ரிவால்.அதேபோல் மற்றுமொரு சம்பவம் நேற்று நடந்துள்ளது.
டெல்லி அமைச்சரவையில் சமூக நலம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்தவர் சந்தீப்குமார் (36). இவர் தொடர்பான சி.டி. முதல்வரின் பார்வைக்கு சென்றுள்ளது. அதில் இரண்டு பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் இருந்தது. இதையடுத்து அவரை உடனடியாக அமைச்சரவையில் இருந்து நீக்கி கெஜ்ரிவால் உத்தரவிட்டார்.