நிலமோசடி புகார்: டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ கைது
டெல்லி: ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. மனோஜ் குமார் நில அபகரிப்பு புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி கொண்டிலி தொகுதி ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.வான மனோஜ் குமார் நிலம் வாங்கித்தருவதாகக் கூறி 6 லட்சம் ரூபாயை ஏமாற்றிவிட்டதாக வினோத்குமார் என்பவர் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மோசடிப் பிரிவின் கீழ் மனோஜ் குமாரைக் கைது செய்தனர்.
ரியல் எஸ்டேட் தொழில்
எம்.எல்.ஏ. மனோஜ்குமார். அரசியலில் நுழைவதற்கு முன்பு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அப்போது அவருடைய தொழில் கூட்டாளி வினோத் என்பவர் மனை வாங்குவதற்காக ரூ.6 லட்சம் பணம் கொடுத்து உள்ளார். ஆனால் நிலம் வாங்கிக்கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.
எம்.எல்.ஏ திடீர் கைது
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும், சந்திரகலா என்பவருக்கு சொந்தமான நிலத்தை மனோஜ்குமார், போலி ஆவணம் மூலமாக ரூ.21 லட்சத்துக்கு விற்பனை செய்தார். இந்த வழக்குகள் தொடர்பாக மனோஜ்குமாரை நேற்று திடீரென கைது செய்தனர். ஆளும்கட்சி எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டதால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது.
குடும்பத்தினர் எதிர்ப்பு
எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டதற்கு அவரது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். முன்கூட்டியே நோட்டீஸ் வழங்காமல் எம்.எல்.ஏ.வை போலீசார் கைது செய்து விட்டனர் என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.
நில மோசடி வழக்கு
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி போலீஸ் கிழக்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் சஞ்சய் பெனிவால், ‘நில அபகரிப்பு மோசடி வழக்கில் எம்.எல்.ஏ.வை கைது செய்து உள்ளோம். இதுகுறித்து அசோக் விஹார் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது' என்று தெரிவித்தார்.
2 நாள் போலீஸ் காவல்
கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ. டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்கப்பட்டது. எம்.எல்.ஏ. தரப்பில் ஆஜரான வக்கீல் பூல்கா, ‘ஒரு வருடத்திற்குமுன்பு பதிவான வழக்கில், தற்போது எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டு உள்ளார். போலீசுக்கும், ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே நடக்கும் மோதலில் எம்.எல்.ஏ. பலிகடா ஆக்கப்பட்டு உள்ளார். அவர் எம்.எல்.ஏ.வாக இல்லாதபோது கைது செய்யாதது ஏன்?' என்று கேள்வி எழுப்பினார். பின்னர், நீதிபதி சவுரப் பிரதாப்சிங், 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார்.
சட்ட அமைச்சர் கைது
போலி கல்விச் சான்றிதழ் வழக்கில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த டெல்லி சட்ட அமைச்சர் ஜிதேந்தர் சிங் தோமர் தனது அமைச்சர் பதவியை இழந்து தற்போது சிறையில் உள்ளார்.
போலி கல்வி சான்றிதழ்
இதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியின் மற்றொரு பெண் எம்.எல்.ஏ.வான பவனா கவுர் மீது போலி கல்வி சான்றிதழ் புகார் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ஆம் ஆத்மி கட்சி கட்சி எம்.எல்.ஏ. மனோஜ் குமார் கைது செய்யப்பட்டிருப்பது டெல்லி வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், கெஜ்ரிவால் அரசுக்கு நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.