ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றியது டெல்லி ஹைகோர்ட்!
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் வேறு அமர்வுக்கு மாற்றியுள்ளது.
டெல்லி: ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் வேறு அமர்வுக்கு மாற்றியுள்ளது. மேலும் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தடை தொடரும் என்றும் டெல்லி ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இந்த கட்சியைச் சேர்ந்த, 20 எம்எல்ஏக்கள் ஆதாயம் தரும் இரட்டை பதவிகளை வகிப்பதாகவும் அவர்களை தகுதி நீக்கம் செய்யும்படியும் குடியரசுத் தலைவருக்கு தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்திருந்தது.
இதையடுத்து ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சமீபத்தில் தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட்டார். இந்நிலையில், தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து, ஆம் ஆத்மி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு கடந்த 24ஆம் நீதிபதி விபு பக்ரு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, எம்எல்ஏக்களின் தகுதி நீக்க உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டார்.
மேலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 20 எம்எல்ஏக்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்த உத்தரவையும் ஜனவரி 29ஆம் தேதி வரை அறிவிக்கக்கூடாது என்றும் தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணக்கு வந்தது. அப்போது எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை நீதிபதி வேறு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான இடைக்காலத் தடை தொடரும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.