வெடித்த உட்கட்சி மோதல்: டெல்லியில் இன்று ஆம் ஆத்மி தேசிய செயற்குழு கூட்டம்!
டெல்லி: உட்கட்சி மோதல் வெடித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. ஆம் ஆத்மியில் அரவிந்த் கேஜ்ரிவாலை முன்னிலைப்படுத்துவதற்கு பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் இக் கூட்டம் நடைபெறுகிறது.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது அரவிந்த் கேஜ்ரிவால், தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார். ஆனால் ஆம் ஆத்மியின் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் இதை ஒருமனதாக நிராகரித்தனர்.
இதைதொடர்ந்து கட்சியின் உயர்மட்ட முடிவு எடுக்கும் கூட்டத்திலும் கேஜ்ரிவால் கலந்து கொள்ளவில்லை. ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான யோகேந்திர யாதவ் மற்றும் பிரஷாந்த் பூஷண் ஆகியோர் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து கேஜ்ரிவாலை நீக்க திட்டம் வகுத்ததாக கட்சிக்குள் பலத்த கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெறும் 21 பேர் கொண்ட ஆம் ஆத்மி தேசிய செயற்குழு கூட்டத்தில் கருத்து வேறுபாடு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.
கட்சியின் அரசியல் விவகாரங்கள் குழுவிலிருந்து பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோரை நீக்குவது பற்றியும் இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்படவும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே இன்றைய தேசிய செயற்குழு கூட்டத்தில் கேஜ்ரிவால் பங்கேற்க மாட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. உடல்நிலை காரணமாகவும், அரசு அலுவல் சார்ந்த பணிகள் இருப்பதாலும் கூட்டத்தில் கேஜ்ரிவால் கலந்துகொள்ள மாட்டார் என ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.