ஆதரவாளர்களுடன் பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆலோசனை! உருவாகிறது புதிய கட்சி!!
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தியாளர்களான பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் தமது ஆதரவாளர்களுடன் புதிய கட்சி தொடங்குவது குறித்து இன்று ஆலோசனை நடத்தினர்
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்து அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வராக பதவி ஏற்றதும் அவருக்கும், அக்கட்சியின் முன்னணி தலைவர்களான பிரசாந்த்பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
கேஜ்ரிவால் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், கட்சியில் ஜனநாயகம் இல்லை என்றும் குற்றம் சாட்டினார்கள். இந்த நிலையில் ஆம் ஆத்மி தேசிய கவுன்சில் உறுப்பினர் பதவியில் இருந்து பிரசாந்த்பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டனர். இது கட்சியில் மேலும் பிளவை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் இன்று ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள். டெல்லியை அடுத்த குர்கானில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் ஆம் ஆத்மி அதிருப்தியாளர்களும், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதிய கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதனிடையே பிரசாந்த் பூஷண் நடத்தும் இந்தக் கூட்டத்துக்கு கட்சி அங்கீகாரம் அளிக்க வில்லை; எனவே இந்த கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய்சிங் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.