பஞ்சாபில் ஆம் ஆத்மியின் ஆட்சிக்கனவு தகர்ந்தது ஏன்?
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறிய நிலையில் மூன்றாவது இடத்தையே பிடித்துள்ளது.
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்த நிலையில் மூன்றாவது இடத்தை மட்டுமே அக்கட்சி பிடித்துள்ளது.
டெல்லியைப் போல பஞ்சாப் மாநிலத்திலும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் என்ற கனவும், நம்பிக்கையும் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு இருந்தது. அதே நம்பிக்கையில் ஆம் ஆத்மி தொண்டர்கள் கடுமையாக உழைத்தனர்.
பஞ்சாப் மாநிலத்தில் கட்டுக்கடங்கா ஊழல், அம்மாநிலத்தை சீரழித்துவரும் போதை வஸ்துகள் கடத்தல் - புழக்கம் என்று ஆளும் கூட்டணி மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் மக்கள். இந்த கோபத்தை தங்களுக்கு சாதகமாக திருப்ப ஆம் ஆத்மி கட்சியினர் முயற்சி செய்தனர். வீடு வீடாக சென்று ஆளும் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்தனர்.
அர்விந்த் கெஜ்ரிவாலும் கடுமையாக பிரச்சாரம் செய்தார். பஞ்சாப் மாநிலத்திற்கு ஆம் ஆத்மி கட்சி புதிய வரவு என்றாலும் ஏழை மற்றும் அடித்தட்டு மக்களுடன் நெருங்கி பழகி வாக்கு சேகரித்தனர். இதனால் அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது.
வேட்பாளர் அறிவிப்பு
தேர்தல் தேதியை மத்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்தபோது, காங்கிரஸையும் அகாலிதள - பாஜக கூட்டணியையும் முந்திக்கொண்டு, தன்னுடைய வேட்பாளர்களை அறிவித்தது ஆம் ஆத்மி கட்சி. அதேசமயம், ஆம் ஆத்மி கட்சிக்கு எல்லாமே நல்லதாகவும் நடந்துவிடவில்லை. கட்சிக்குள் ஊழல் புகார்களும் உள்பூசல்களும் புகுந்துவிட்டன. கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராகப் பேசினார்கள் என்பதற்காக 4 லோக்சபா உறுப்பினர்களில் 2 பேர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
முதல்வர் வேட்பாளர் யார்?
பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியை வளர்ப்பதில் முக்கியப் பங்கு வகித்தவரும் ஒருங்கிணைப்பாளருமான சூச்சா சிங் ஊழல் புகாரால் விலக்கப்பட்டார். வேட்பாளர் தேர்வுக்கு வெளியாட்கள் நியமிக்கப்பட்டதும் தொண்டர்களின் அதிருப்தியை அதிகரித்தது. எல்லாவற்றுக்கும் மேலாக ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று சொல்ல முடியவில்லை.
அர்விந்த் கெஜ்ரிவால்
பஞ்சாபின் பிரச்சாரம் துவக்கிய போது மேடைகளில் பேசிய கெஜ்ரிவால், ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் என யாரையும் நிறுத்தப் போவதில்லை எனவும், வெற்றிகு பின் அதன் எம் எல் ஏக்கள் அப்பதவிக்கு ஒருவரை தேர்ந்தெடுப்பார்கள் என்றும் கூறி இருந்தார், இதுவும் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
முதல்வர் வேட்பாளர் சர்ச்சை
பஞ்சாப் முதல்வராக கெஜ்ரிவாலை அமர்த்த வாக்களியுங்கள் உங்கள் பிரசனைகளை ஆம் ஆத்மி கட்சி சார்பில் கெஜ்ரிவால் தீர்த்து வைப்பார். அவரே அடுத்த முதல்வர் என எண்ணி கெஜ்ரிவாலுக்கு வாக்களியுங்கள் என்று தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா பேசினார். இது கடும் விமர்சனத்திற்கு ஆளானது.
கனவு தகர்ந்தது
எது எப்படியோ டெல்லியைப் போல பாஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மியின் ஆட்சிக்கனவு தகர்ந்துள்ளது எனினும் படு தோல்வியை சந்திக்காமல் குறிப்பிடத்தகுந்த இடங்களை பிடித்துள்ளது. வரும் காலங்களில் பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற அறிவிப்புடன் தேர்தலை சந்திக்கும் பட்சத்தில் ஆம் ஆத்மி கட்சி வெற்றியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
காலம் இருக்கிறது
தேர்தல் பிரச்சார கூட்டங்களில் அலை அலையாக கூடும் கூட்டம் மட்டுமே வாக்குகளை அள்ளித்தந்து விடாது என்பதை அர்விந்த் கெஜ்ரிவால் இந்த தேர்தலில் மூலம் உணர்ந்து கொள்வார். ஆம் ஆத்மி கட்சிக்கு பஞ்சாப் மாநிலம் புதிய களம். இனி வரும் காலங்களில் உட்கட்சி பூசலை களைந்து களப்பணியை மாற்றி ஆட்சியை கைப்பற்றுமா பார்க்கலாம்.