ஆம் ஆத்மி அரசியல் விவகாரக் குழுவில் இருந்து பூஷன், யாதவ் நீக்கம்: கெஜ்ரிவால் ராஜினாமா நிராகரிப்பு
டெல்லி: புதன்கிழமை டெல்லியில் நடந்த ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் மூத்த தலைவர்களான பிரசாந்த் பூஷன் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர் அரசியல் விவகாரக் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் புதன்கிழம மாலை டெல்லியில் நடைபெற்றது. அதில் மொத்தமுள்ள 21 தேசிய செயற்குழு உறுப்பினர்களில் 19 பேர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்ளவில்லை. அவர் சிகிச்சை பெற பெங்களூர் கிளம்பியதால் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
உட்கட்சி பூசல் வெடித்துள்ள நிலையில் கெஜ்ரிவால் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி நேற்று 2வது முறையாக கடிதம் அளித்தார். அந்த கடிதத்தை ஏற்க செயற்குழு உறுப்பினர்கள் மறுத்துவிட்டனர். மேலும் கெஜ்ரிவால் தன்னிச்சையாக செயல்படுவதாக அவர் மீது குற்றம் சாட்டி வந்த மூத்த தலைவர்கள் பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ் ஆகியோரை அரசியல் விவகாரக் குழுவில் இருந்து நீக்கி செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பூஷன் மற்றும் யாதவை அரிசயல் விவகாரக் குழுவில் இருந்து நீக்க ஆதரவாக 11 பேர் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டம் 6 மணிநேரம் நடைபெற்றது.
கூட்டம் முடிந்த பிறகு வெளியே வந்த யோகேந்திர யாதவ் கூறுகையில்,
ஆம் ஆத்மி கட்சியின் தொண்டனாக எனக்கு அளித்துள்ள வேலையை நான் ஒழுங்காக செய்வேன் என்றார்.
தற்போதைக்கு நாங்கள் அரசியல் விவகாரக் குழுவில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்று மட்டும் தெரிவித்துவிட்டு பிரசாந்த் பூஷன் சென்றுவிட்டார். கெஜ்ரிவாலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பிரசாந்த் பூஷன் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர் கட்சியின் அரசியல் விவகாரக் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக கடந்த மாதம் நடந்த செயற்குழு கூட்டத்தின்போதும் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி கெஜ்ரிவால் கடிதம் அளித்தார். ஆனால் அவரது ராஜினாமா கடிதத்தை செயற்குழு ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.