பாஜக, காங்கிரஸ் கட்சிகளை துடைத்து தூசி தட்டிய ஆம் ஆத்மியின் துடைப்பம்
டெல்லி: 2013ஆம் ஆண்டு 49 நாட்கள் மட்டுமே முதல்வராக பதவி வகித்த கெஜ்ரிவால், இனி 5 ஆண்டுகளுக்கு டெல்லியின் முதல்வர் நாற்காலியை அலங்கரிக்கப் போகிறார்.
மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற எதிர்கட்சிகளை எதிர்பார்க்க வேண்டியதில்லை. அரிதிப் பெரும்பான்மை பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆட்சியமைக்கப் போகிறது ஆம் ஆத்மி கட்சி.
‘பாஞ்ச் சால் கெஜ்ரிவால்' இது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆம் ஆத்மி கட்சியினரின் மிக முக்கிய கோஷமாக இருந்தது. கடந்த முறை நான் செய்த தவறினை மீண்டும் செய்யமாட்டேன் என்று கூறியே வாக்கு கேட்டார் கெஜ்ரிவால். டெல்லிவாசிகளும் தங்களின் அமோக ஆதரவை கெஜ்ரிவாலுக்கு வழங்கியுள்ளனர்.
கெஜ்ரிவால் ஒரு நக்சல்பாரி என்று தேர்தல் பிரச்சாரத்தில் சொன்ன பிரதமர் மோடி, இன்றைக்கு டெல்லி ஆட்சிக்கு முழு ஒத்துழைப்பும் தருவதாக கூறியுள்ளார்.
காங்கிரஸ்….! ‘டக்’ அவுட்
டெல்லியில் வாக்குப்பதிவு நாளன்று தனது வாக்கினை பதிவு செய்த காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் அஜய் மாக்கன், "டெல்லி தேர்தலில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றி பெறும். மக்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும் அதிகாரம் எங்களுக்கு கிடைக்கும். நாங்கள் உண்மையான அரசியல் செய்கிறோம் என்று கூறினார். ஆனால் இன்றைக்கு அவரே தோற்றுப்போய் நிற்கிறார்.
ஆம் ஆத்மிக்கு ஆதரவு தரமாட்டோம்
ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் அந்த கட்சிக்கு இம்முறை ஆதரவு அளிக்க தயாரா? என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அஜய் மாக்கன், "ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்காது. இனி எப்போதுமே அந்த கட்சிக்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் தயாராக இல்லை என்று கூறினார். ஆனால் எங்கள் ஆதரவு உங்களுக்கு இல்லை என்று கூறி ‘முட்டை'யை பரிசளித்துவிட்டனர்.
டெல்லிவாசிகளின் விருப்பம்
"டெல்லி மக்களின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறும். அவர்களின் விருப்பம் என்னவோ அவை மட்டுமே நடக்கும்" என்று வாக்குப்பதிவு தினத்தன்றே சொன்னார் சோனியாகாந்தி. ஆனால் மக்களின் விருப்பம் காங்கிரஸ் கட்சியை ‘வாஸ் அவுட்' செய்வதுதான் என்று உணராமல் இருந்துவிட்டார்.
எட்டும் போச்சே
2013 சட்டமன்ற தேர்தலில் 8 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சிக்கு இம்முறை ஒரு இடம் கூட கிடைக்காமல் போனதற்கான காரணத்தை காங்கிரஸ் கட்சியினர் ரூம் போட்டு யோசித்துக்கொண்டிருக்கின்றனர். ராகுல்காந்தி ராசியில்லையோ என்று எண்ணியதன் விளைவுதான் ‘பிரியங்கா மாதா காப்பாத்து' என்று கதறவைத்திருக்கிறது.
31லிருந்து 3க்கு
கடந்த 2013ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 31 இடங்களை வென்று முதலிடத்தில் இருந்தது பாஜக ஆனாலும் ஆட்சியமைக்க முன்வரவில்லை. லோக்சபா தேர்தலில் 7 தொகுதிகளையும் கைப்பற்றியது. ஆனாலும் இந்த சட்டமன்ற தேர்தலில் வெறும் மூன்று இடங்களை மட்டுமே பாஜகவினால் வெல்ல முடிந்தது. 25, 30, 35 என்று சொன்ன அனைத்து கருத்துக்கணிப்புகளும் பொய்யாகப் போனதுதான் சோகம்.
எங்கே சறுக்கினோம்?
லோக்சபா பொதுதேர்தலில் வீசிய மோடி சுனாமி அடுத்தடுத்து நடைபெற்ற சட்டசபை தேர்தல்களிலும் வீசியது. இந்த அலை தந்த நம்பிக்கையில் டெல்லியை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர் பாஜகவினர். ஏழு எம்.பி தொகுதிகளை டெல்லிவாசிகள் பரிசளித்தும் அதனை நோஞ்சான் பிள்ளையாகவே வைத்திருந்தது மத்தியில் ஆளும் பாஜக அரசு. இதுதான் முதல் சறுக்கல்.
தூக்கி தூரப்போடு
முதல்நாள் கட்சியில் சேர்ந்த கிரண்பேடியை மறுநாள் முதல்வர் வேட்பாளராக அறிவித்தார் அமித்ஷா. மோடியின் தனிப்பட்ட தேர்வுதான் கிரண்பேடி. தனக்காக டெல்லியில் ஓட்டு விழும் என்று மோடி நம்பி பேடியை நிறுத்தியதுதான் யானை குழியை வெட்டி தனக்குத்தானே மண்ணையும் வாரி போட்டுக்கொண்டது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
நாடு முழுவதும் நிலநடுக்கம்
டெல்லியில் கடந்த முறை காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்கு காரணமாக அமைந்த ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களை வென்றது. பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் காங்கிரஸ் தயவில் ஆட்சியில் அமர்ந்தும் அர்விந்த் கெஜ்ரிவால் 49 நாட்களுக்கு மேல் முதல்வராக நீடிக்க முடியவில்லை. பிப்ரவரி 14ஆம் தேதி பதவியிழந்தார். ஒரு ஆண்டுகாலம் பொறுமையாக காத்திருந்த ஆம் ஆத்மி கட்சிக்கு 67 இடங்களை அள்ளித்தந்து மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளனர். இது நாடுமுழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
கண் கலங்கிய கெஜ்ரிவால்
2013ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் நாள் முதல்வர் பதவியில் இருந்து விலகிய கெஜ்ரிவால் கண்கள் கலங்க டெல்லிமக்களிடம் இருந்து விடை பெற்றார். இவர் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார் என்று எதிர்கட்சியினர் சாடினர். ஆனால் எனக்கும் அரசியல் தெரியும் என்று ஒருவருடம் கழித்து நிரூபித்துள்ள அர்விந்த் கெஜ்ரிவால் பதவியிழந்த அதே நாளில் மீண்டும் பதவியேற்கப் போகிறார் என்பதுதான் விந்தையான நிகழ்வு.
அன்னா ஹசாரே
இந்த வெற்றியை பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் மோடிக்கான தோல்வியாகவே பார்க்கின்றனர். சமூக ஆர்வலரும் காந்தியவாதியுமான அன்னா ஹசாரோ, பாஜக அரசு கடந்த 9 மாதமாக என்ன செய்தது என்று கேட்டுள்ளார். ஊழலை ஒழிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத பாஜக அரசு விவசாயிகளுக்கும், ஏழை மக்களுக்கு எதிரானதாக செயல்பட்டது. எனவேதான் மக்களின் நம்பிக்கையை இன்றைக்கு இழந்து நிற்கிறது என்று கூறியுள்ளார்.
அராஜகத்திற்கான பரிசு
கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வரான வி.எஸ். அச்சுதானந்தன், "டெல்லி தேர்தல் முடிவு மோடி அரசின் அராஜகத்திற்கு கிடைத்த பரிசு" என்று கூறியுள்ளார்.
அத்தனையும் சுருட்டி
மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களை வாரி சுருட்டிக்கொண்டது. போனால் போகட்டும் என்று மூன்றே மூன்று தொகுதிகளை விட்டுக்கொடுத்திருக்கிறது. இது பாஜக, காங்கிரஸ் கட்சிகளை சுருட்டவந்த ‘ஏகே சுனாமி' என்று வருணிக்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
நம்ப முடியவில்லை
கெஜ்ரிவால் கண்கள் ஆனந்தத்தில் குளமாகிவிட்டது என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் பங்கஜ் குப்தா தெரிவித்துள்ளார். நேற்று இரவு ஒரு பொட்டு தூக்கமில்லை. என்ன ஆகுமோ? என்று முடிவைப் பற்றி டென்சனுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் இந்த தேர்தல் முடிவை எங்களால் நம்ப முடியவில்லை என்று கூறியுள்ளார்.
ஆல் தி பெஸ்ட் சொன்ன அர்விந்த்
விடியற்காலையிலேயே டெல்லிவாசிகளுக்கு ஆல் தி வெரி பெஸ்ட், பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறி டுவிட் செய்தார் ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கெஜ்ரிவால். மக்களின் பிராத்தனை பலித்துவிட்டது என்பதுபோல அமைந்துள்ளது தேர்தல் முடிவுகள்.
இனி மக்கள் சொல்கிறார்கள் "பாஞ்ச் சால் கெஜ்ரிவால்... ஆல் தி வெரி பெஸ்ட்"