ஆருஷி கொலை வழக்கில் அதிரடி திருப்பம்.. பெற்றோரை விடுதலை செய்த அலகாபாத் ஹைகோர்ட்
சிறுமி ஆருஷி கொலை வழக்கில் இருந்து சிறுமியின் பெற்றோர் விடுதலை செய்யப்பட்டனர். ஆயுள் தண்டனையை எதிர்த்து பெற்றோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது.
Recommended Video
அலகாபாத்: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சிறுமி ஆருஷி கொலை வழக்கில் இருந்து பெற்றோர் விடுதலை செய்யப்பட்டனர். ஆயுள் தண்டனையை எதிர்த்து பெற்றோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது.
கடந்த 2008ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில், ஆருஷி தல்வார், என்ற 14 வயது சிறுமி மற்றும் வீட்டு வேலையாள் ஹேம்ராஜ் ஆகியோர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
ஆருஷியின் பெற்றோரான ராஜேஷ் தல்வார், நூபுர் தல்வார் ஆகியோரே கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், இருவருக்கும் 2013ஆம் ஆண்டில் ஆயுள் தண்டனை விதித்தது.
உ.பி. மாநிலம் நொய்டாவின் மருத்துவத் தம்பதியான ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வார் மீது தம் ஒரே மகளான 14 வயது ஆரூஷி மற்றும் வேலைக்காரர் ஹேமராஜை கொலை செய்ததாக சிபிஐ குற்றம் சாட்டியது. கடந்த 2008ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி நள்ளிரவில் நடந்த இந்த இரட்டைக் கொலையை உ.பி. போலீஸ் சரியாக விசாரிக்கவில்லை என இவ்வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.
தல்வார் தம்பதி கவுரவக் கொலையாக இதை செய்திருக்கலாம் என கருத்துகள் வெளியாகத் தொடங்கி உள்ளன. வட இந்தியாவில் தொடங்கி கிராமங்களில் மட்டும் இருந்து வந்த இந்த கவுரவக் கொலை தற்போது நகரங்களிலும் பரவி விட்டதாக கருதப்படுகிறது.
இரண்டு வருடம், 9 மாத விசாரணைக்கு பின் காஜியாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம், பெற்றோரே குற்றவாளிகள் என கடந்த 2013ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.
சிபிஐ வழக்கறிஞர்கள் தம் தரப்பு வாதத்தில் தல்வார் தம்பதி செய்த கொலையை அரிதிலும் அரிதாகக் கருதி மரண தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டனர். இதன் மீது எதிர்வாதம் செய்த தல்வார் தரப்பு வழக்கறிஞர்கள், இருவர் மீதும் நேரடி ஆதாரங்கள் இல்லை என்பதால், குற்றவாளிகள் மீது கருணை காட்டப்பட வேண்டும் எனக் கூறினர்.
இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, தல்வார் தம்பதிக்கு ஆயுள் தண்டனை வழங்கினார். அத்துடன், தல்வார் தம்பதிக்கு அபராதமும் அறிவித்தார். அவர் தனது தீர்ப்பில், குற்றவாளிகளான ராஜேஷ் தல்வார் மற்றும் அவரது மனைவி நுபுர் தல்வார் ஆகிய இருவருக்கும் ஐபிசி 302 பிரிவின் கீழ் ஆயுள் தண்டனை அளிப்பதாக அறிவித்தார்.
பிரிவு 201-ல் ஐந்து வருடம் மற்றும் பிரிவு 34-ன் கீழ் இரண்டு வருட சிறைத்தண்டனையும் வழங்கப்படுவதாக கூறினார்.
வழக்கைத் திசை திருப்ப முயன்றதாக ராஜேஷ் தல்வார் மீது கூடுதலாகப் பதிவான பிரிவு 203க்காக ஒரு வருடம் சிறைத்தண்டனையும் அளிக்கப்பட்டது.
டாக்டர் தம்பதியர் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அலகாபாத் ஹைகோர்ட்டில் அப்பீல் செய்தனர். அப்பீல் வழக்கின் விசாரணையில் அனைத்து சாட்சியங்களும் விசாரிக்கப்பட்ட நிலையில் தீர்ப்பு அக்டோபர் 12ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. திடீர் திருப்பமாக சிறுமி ஆருஷியின் பெற்றோரை விடுதலை செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.