சிபிஐ எங்களுக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்கிறது: ஆருஷியின் பெற்றோர்
டெல்லி: ஆருஷி, ஹேம்ராஜ் கொலை வழக்கு குறித்து சிபிஐ தவறான தகவல்களை அளித்துள்ளதாக ஆருஷியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2008ம் ஆண்டு நொய்டாவில் 14 வயது சிறுமி ஆருஷி மற்றும் அவரது வீட்டில் வேலை செய்து வந்த ஹேம்ராஜ் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலையில் ஆருஷியின் பெற்றோர் டாக்டர்கள் ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆருஷியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தல்வார் படம் ரிலீஸான பிறகு இந்த இரட்டை கொலை குறித்த ஆவணங்களை சிபிஐ தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இது குறித்து ராஜேஷ், நுபுர் தல்வார் தங்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
சிபிஐ தனது வெளிப்படைத்தன்மையை தெரியப்படுத்த நினைத்திருந்தால் தன்னிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் அது தல்வார்களின் பெயரை கெடுக்கும் ஆவணங்களை மட்டும் வெளியிட்டுள்ளது.
மீடியாக்களும் சிபிஐயின் பக்கம் தான் உள்ளன. விசாரணை ஏஜென்சி தவறான பிரச்சாரம் செய்து வருகிறது என்று அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.
சிபிஐ செய்தித் தொடர்பாளர் தேவ்ப்ரீத் சிங் கூறுகையில்,
ஆரூஷி-ஹேம்ராஜ் கொலை வழக்கு பற்று பலரும் விவாதித்து வருகிறார்கள். அதனால் தான் மக்களுக்கு உதவும் கையில் இது குறித்த ஆவணங்களை cbi.nic.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்றார்.