நியாயம் கிடைக்குமா?: 7 ஆண்டுகள் கழித்து மௌனம் கலைத்த ஆருஷியின் தாத்தா
நொய்டா: நொய்டாவில் கொலை செய்யப்பட்ட சிறுமி ஆருஷி தல்வாரின் தாத்தாவான ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஃபேஸ்புக்கில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நொய்டாவில் வசித்து வந்த ஆருஷி தல்வார்(14) கடந்த 2008ம் ஆண்டு தனது வீட்டில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதே வீட்டில் வேலை செய்த ஹேம்ராஜ் என்பவரும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
அவர்கள் இருவரையும் ஆருஷியின் பெற்றோர் டாக்டர் ராஜேஷ் தல்வார் மற்றும் டாக்டர் நுபுர் தல்வார் தான் கௌரவ கொலை செய்திருக்கக்கூடும் என்று கூறப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நுபுர் தல்வாரின் தந்தையும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியுமான கேப்டன் பி.ஜி. சிட்னிஸ் ஃபேஸ்புக்கில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
ஆருஷி என்ற தேவதை என் பேத்தியாக இருந்தார். அவர் 1994ம் ஆண்டு மே மாதம் பிறந்ததில் இருந்து எங்கள் மற்றும் அவரது தாத்தா, பாட்டி வீட்டில் வளர்க்கப்பட்டார். அவர் பெரிய கண்களுடன் அழகான சிறுமியாக வளர்ந்ததை பார்த்தோம். அவர் எங்கள் வாழ்வில் அளவில்லா மகிழ்ச்சியை கொண்டு வந்தார்.
அவர் 14 வயதை அடைந்த உடன் விதி அவரை எங்களிடம் இருந்து பிரித்துவிட்டது. அவர் அவரது வீட்டில் அதுவும் அவரது படுக்கையிலேயே படுகொலை செய்யப்பட்டார். உயிரற்ற அவரது உடலை பார்த்தவுடன் அதிர்ச்சியில் உறைந்தேன். என்னை சுற்றி சில முகங்கள் தொடர்ந்து வருவதை பார்த்தேன். என் மகள் நுபுர் அழுததையும், அவரது கணவர் ராஜேஷ் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் அங்கும் இங்குமாக நடந்ததையும் பார்த்தேன்.
நாட்கள் செல்ல செல்ல உள்ளூர் போலீசார் ஆர்வமே இல்லாமல் விசாரணை நடத்தி ராஜேஷை கைது செய்தனர். இதையடுத்து மீரட் ஐஜி அளித்த பேட்டியை வைத்து மீடியாக்கள் அதை பெரிதாக்கின. இந்த வழக்கு பற்றி நாங்கள் பேசக் கூடாது என்று உத்தர பிரதேச போலீசார் எங்களை திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டனர். நாங்கள் யாரிடமாவது பேசினால் வழக்கு பாதிக்கும் என்றார்கள் ஆனால் அவர்களின் நோக்கம் வேறு. எங்களை மீடியாவை சந்திக்கவிடாமல் வைப்பதே அவர்களின் நோக்கம்.
மீடியாவோ தனது பங்கிற்கு கணித்து செய்தி வெளியிட்டது. இதனால் நுபுர் மற்றும் ராஜேஷ் தல்வார் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
தீர்ப்பு வழங்கப்பட்டபோது நான் முழங்காலிட்டு என் கண்களில் கண்ணீர் வழிந்து, உடலும், உயிரும் நடுங்கிவிட்டது. விதி எங்கள் வாழ்வில் அடுத்த அடியை அடித்து என் உலகத்தை நொறுக்கிவிட்டது.
83 வயதாகும் நான் அவர்கள் சிறையில் இருந்து வருவதை பார்க்க முடியும் என்று நினைக்கவில்லை. ஆனால் இந்த அநீதிக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடுவார்கள் என்பதை தெரிந்து கொண்டு மரணிக்க விரும்புகிறேன். போலீஸ், மீடியா, சிபிஐ அல்லது நீதித்துறை மீதான நம்பிக்கை போய்விட்டது.
நான் எந்த தவறானவற்றையும் செய்யுமாறு கேட்கவில்லை. அவர்களுக்கு சட்டப்படி என்ன செய்யவேண்டுமோ அதை தாண்டியும் எதையும் கேட்கவில்லை. நான் விமானப்படையில் இருந்தபோது எப்படி நாட்டின் கௌரவத்தை காத்தேனோ, அதே போன்று அவர்களின் கௌரவத்தை மீட்க அவர்களுக்கு சுதந்திரமான, நியாயமான விசாரணை நடக்க வேண்டும். இந்த நாட்டுக்காக நான் இரண்டு போர்களில் போராடியுள்ளேன். நாட்டுக்காக உண்மையாக உழைத்துள்ளேன். இந்த வயதான காலத்தில் இதை தான் நான் இந்த நாட்டிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.
நுபுர் மற்றும் ராஜேஷுக்கு நடந்தது இந்த சமூகத்தில் யாருக்கு வேண்டும் ஆனாலும் நடக்கலாம் என்பதை அனைவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். இந்த நாட்டிற்காக தான் நான் கனவு கண்டேனா, போராடினேனா என்று சில நேரம் வியக்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.