கேலோ இந்தியா விளையாட்டுகளை தொடங்கி வைக்க அஸ்ஸாமுக்கு மோடி வந்தால்.... மாணவர் அமைப்புகள் வார்னிங்
குவஹாத்தி: கேலோ இந்தியா விளையாட்டுகளை தொடங்கி வைக்க அஸ்ஸாமுக்கு பிரதமர் மோடி வருகை தந்தால் போராட்டம் வெடிக்கும் என்று அனைத்து அஸ்ஸாம் மாணவர்கள் ஒன்றியம் (ஏ.ஏ.எஸ்.யூ)எச்சரிக்கை விடுத்துள்ளது.
குவஹாத்தியில் ஏ.ஏ.எஸ்.யூ தலைவர் திபங்கா குமார் நாத் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தொடர் போராட்டங்கள் அஸ்ஸாமில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் குவஹாத்தியில் 2 முக்கிய விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
இந்தியா- இலங்கை இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி குவஹாத்தியில் 5-ந் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து கேலோ இந்தியா போட்டிகள் ஜனவரி 10-ந் தேதி முதல் 22-ந் தேதிவரை குவஹாத்தியில் நடைபெறுகிறது.
கேலோ இந்தியா பள்ளிக்கூட விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி அஸ்ஸாமுக்கு வருகை தர உள்ளார். குடியுரிமை சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அஸ்ஸாமுக்கு பிரதமர் மோடி முதல் முறையாக வருகிறார்.
அப்போது பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக பிரமாண்ட போராட்டம் நடைபெறும். குவஹாத்தியில் நடைபெறும் டி20 கிரிக்கெட் போட்டியையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இவ்வாறு திபங்கா குமார் நாத் கூறினார்.
இதேபோல் ஏ.ஏ.எஸ்.யூ முதன்மை ஆலோசகர் சமுஜ்ஜல்குமார் பட்டாச்சார்யா கூறுகையில், போராடும் மக்களை திசை திருப்புவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசுகள் மேற்கொண்டுள்ளன. மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தம் திரும்பப் பெறப்படும் வரை போராட்டங்கள் தொடரும்.
இரு விளையாட்டு போட்டிகளின் போது எத்தகைய எதிர்ப்புகளை வெளிப்படுத்துவோம் என்பது பின்னர் தெரிய வரும் என்றார்.