இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஏ.பி.பரதன் உடல் தகனம்
டெல்லி: மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும் மூத்த தலைவருமான ஏ.பி.பரதன் உடல் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும் மூத்த தலைவருமான ஏ.பி.பரதன் (92), நேற்று முன்தினம் காலமானார்.
அவரது உடல் கட்சியின் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பரதனின் உடலுக்கு குடியரசுத் துணை தலைவர் ஹமீத் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜ் பார்பர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் பிற்பகல் அவரது உடல் தலைமை அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, டெல்லி நிகம்போத்காட்டில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது
பரதனின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஜெயலலிதா, உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.