பெண்ணை கடத்தி பலாத்காரம், போலீசுக்கு கத்தி குத்து.. தமிழக வாலிபர்களை சுட்டு பிடித்த பெங்களூர் போலீஸ்
Recommended Video
பெங்களூர்: பெங்களூரில் பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த தமிழக வாலிபர்கள் இருவர் போலீசாரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோட முயன்றபோது, சுட்டு பிடிக்கப்பட்டனர்.
பெங்களூர், பெல்லந்தூர் சர்ஜாபுரா ரோடு பகுதியில், வசித்து வரும் 28 வயதுள்ள ஒரு பெண்ணை கடந்த 18ம் தேதி இரவு சிலர் காரில் கடத்தியுள்ளனர்.
அந்த வழியாக சென்ற சிலர் இதைப்பார்த்து போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் ரோந்தை தீவிரப்படுத்தினர்.
பாலியல் தொல்லை
இதனிடையே, காரில் அந்த பெண்ணை கடத்திய மர்மநபர்கள் அவரை காருக்குள் வைத்தே பல்வேறு வகையில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். தங்கள் வெறி தீர்ந்ததும், அவரை கசவனஹள்ளி பகுதியில் காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு தப்பி சென்றனர். பாலியல் சீண்டல்கள் மற்றும் கடத்தல், அடி உதை போன்றவற்றால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அந்த பெண், அரைகுறை மயக்கத்துடன் சாலையோரம் விழுந்து கிடந்தார். இதைப் பார்த்த சிலர் அந்த பெண்ணை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். போலீசார் அங்கு சென்று அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து பெல்லந்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
தர்மபுரி கார்
விசாரணையின்போது, கடத்தலுக்கு பயன்பட்ட அந்த காரை தர்மபுரியை சேர்ந்த ஒருவர் பயன்படுத்தி வருவது தெரியவந்தது. இந்த நிலையில் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் அதே காரில் பெல்லந்தூர் ஏரியாவில்தான் தொடர்ந்து சுற்றுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பெல்லந்தூர் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
போலீஸ் வாகன சோதனை
காடுசித்தாபுரா செல்லும் சாலையில் போலீசார் வாகன சோதனை நடத்திக்கொண்டிருந்தபோது தமிழக பதிவு எண்ணுடன் வந்த கார் ஒன்று போலீசார் வழி மறித்தும் நிற்காமல், இரும்பு தடுப்புகளை இடித்து தள்ளியபடி சென்றது. உஷாரடைந்த போலீசார் அந்த காரை வாகனத்தில் துரத்திச்சென்றனர். குடத்திக்கேட் பகுதியில் காரை போலீசார் மடக்கினார்கள்.
தப்பியோட்டம்
இதையடுத்து, காரை நிறுத்தி விட்டு மர்மநபர்கள் 2 பேரும் அங்கேயிருந்து தப்பியோடினர். போலீசார் அவர்களை விரட்டி சென்றனர். இதனிடையே போலீஸ்காரர் மகாந்தேஷ் முலவாடி என்பவர் இருவர்களில் ஒருவரை மடக்கி பிடிக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த கடத்தல்காரன் அவரை கத்தியால் குத்திவிட்டு ஓடினான். இன்னொரு நபரோ மற்ற போலீசாரை கத்தியால் குத்திவிடுவதாக மிரட்டினான். இதனால் சரண் அடைந்துவிடும்படியும், அல்லது சுட்டுப் பிடிப்போம் என்றும் இன்ஸ்பெக்டர் விக்டர் சைமன் எச்சரித்தபடி வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
துப்பாக்கி சூடு
ஆனாலும், அந்த நபர்கள் சரண் அடைய மறுத்து தப்பி ஓடினார்கள். இதனால், இன்ஸ்பெக்டர் விக்டர் சைமன், சப்இன்ஸ்பெக்டர் சோமசேகர் ஆகியோர் தப்பியோடிய 2 நபர்களையும் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, குண்டுகள் 2 நபர்களின் கால்களிலும் பாய்ந்தன. இதனால், 2 பேரும் அங்கேயே விழுந்தனர் . 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் தர்மபுரியை சேர்ந்த சங்கர்(25), செல்வகுமார்(26) என்று தெரியவந்தது. பெங்களூரு பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தது அவர்கள்தான் என தெரியவந்தது.
கடத்தல்காரர்கள் மற்றும் கத்தி குத்தால் காயமடைந்த கான்ஸ்டபிள் மகாந்தேஷ் முலவாடி ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியது.