மசாஜ் செய்ய ஆட்கள் வைத்துக்கொண்டு பெங்களூர் சிறைக்குள் ராஜ வாழ்க்கை வாழ்ந்த தெல்கி!
பெங்களூர்: பல கோடி மதிப்புள்ள முத்திரைத்தாள் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த அப்துல் கரீம் தெல்கி, உடல் நலக்குறைவால் பெங்களூருவில் இன்று மரணமடைந்தார்.
இவர் சிறைக்குள் பணத்தை அள்ளி வீசி உல்லாச வாழ்க்கை வாழ்ந்தார் என்று சிறைத்துறை டிஐஜியாக இருந்த பெண் அதிகாரி ரூபா குற்றம் சாட்டியிருந்தார்.
போலி முத்திரை தாள்களை தயாரித்து பல்லாயிரக்கணக்கான கோடி மோசடி செய்த வழக்கில், அப்துல் கரீம் தெல்கி (56) கடந்த 2001ம் ஆண்டு அஜ்மீர் நகரில் கைது செய்யப்பட்டார்.
30 வருட சிறை கைதி
இவர் மீதான வழக்கை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. விசாரணை முடிவில் இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், தெல்கிக்கு 30 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.202 கோடி அபராதமும் விதித்தது.
சொகுசு வாழ்க்கை
பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் தெல்கி. ஆனால் பாதுகாப்பு மிக்க இந்த சிறைச்சாலைக்குள் தெல்கி உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார். பெங்களூரு சிறையில் உள்ள சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளி, சசிகலாவுக்கு வசதிகள் செய்யப்பட்டு இருந்ததாகவும், அதற்கான ஆதாரங்கள் அழிக்கப் பட்டு இருப்பதாகவும் கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா குற்றம்சாட்டியது நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் சசிகலாவை மட்டும் அப்படி சொல்லவில்லை, தெல்கியும் உல்லாசமாக இருந்ததாகத்தான் ரூபா கூறியிருந்தார்.
ஆதாரங்கள் அழிப்பு
இந்த குற்றச்சாட்டு புயலை கிளப்பிய பிறகு, தெல்கியை சந்திக்க வந்த பார்வையாளர்களின் கோப்புகள், பார்வையாளர் பதிவேடு, சிசிடிவி காட்சிகள் ஆகியவற்றை ரூபா ஆய்வு செய்தார். ரூபா கூறுகையில், சிறையில் சசிகலா, தெல்கி உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டிருந்த விவிஐபி வசதிகள், காட்டப்பட்ட சலுகைகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. அதற்கான ஆதாரங்கள் அழிக்கப் பட்டிருக்கின்றன என்று மற்றொரு குண்டை வீசியிருந்தார். அந்த அளவுக்கு தெல்கியின் கைகள் சிறைக்குள்ளும் ஓங்கியிருந்தன.
மசாஜ் காட்சி
தெல்கியின் அறை வீடியோ காட்சிகள் கன்னட தனியார் தொலைக் காட்சியில் வெளியானது. அதில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தெல்கிக்கு உதவ 2 சிறைக் கைதிகள் பணி அமர்த்தப்பட்டது தெரியவந்தது. அவர்கள் அவருக்கு கை, கால், முதுகு உள்ளிட்ட இடங்களில் மசாஜ் செய்த காட்சி வெளியானது. சரியான நேரத்தில் தெல்கிக்கு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட உணவும், மருந்துகளும் வழங்கப்பட்டது. தெல்கி, 52 இஞ்ச் எல்சிடி தொலைக்காட்சியில் திரைப்படம் பார்த்தவாறே சாப்பிடும் காட்சிகள் அதில் இடம் பெற்றிருந்தன. தெல்கியின் அறையில் சொகுசான சோஃபா, கட்டில் மெத்தை, மினரல் வாட்டர் இயந்திரம், சமையலறை, ப்ரிட்ஜ் உள்ளிட்ட வசதிகளும் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான், தெல்கி உடல் நலக்குறைவால் இன்று மரணமடைந்துள்ளார்.