முத்திரைத்தாள் மோசடி மன்னன் அப்துல் கரீம் தெல்கி கவலைக்கிடம்! பெங்களூர் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: பல கோடி மதிப்புள்ள முத்திரைத்தாள் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த அப்துல் கரீம் தெல்கி, உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
2001ம் ஆண்டில் அஜ்மீரில் கைது செய்யப்பட்ட தெல்கிக்கு நீதிமன்றம் 30 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.202 கோடி அபராதமும் விதித்திருந்தது. 20 வருடங்களுக்கும் மேலாக உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த தெல்கிக்கு, உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் இருந்ததும் தெரியவந்தது.
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த இவரும், சசிகலா போன்ற விஐபிகளும், பணத்தை கொடுத்து சிறைக்குள் அனைத்து சலுகைகளையும் அனுபவிக்கிறார்கள் என்று சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா தனது புகார் கடிதத்தில் தெரிவித்து பரபரப்பை கிளப்பியிருந்தார்.
இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூர், விக்டோரியா அரசு மருத்துவமனையில் தெல்கி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வென்டிலேட்டர் உதவியோடுதான் தெல்கி சிகிச்சை பெற்றுக்கொண்டுள்ளார். தெல்கி ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.