சோலார் பேனல் மோசடி: சரிதா நாயரின் பலாத்கார புகாரைத் தொடர்ந்து காங். எம்.எல்.ஏக்கு அடி உதை
திருவனந்தபுரம்: சோலார் பேனல் மோசடி வழக்கில் கைது செய்யப் பட்டுள்ள சரிதா நாயர் அளித்த பாலியல் பலாத்காரப் புகாரை போலீசார் விசாரித்து வரும் நிலையில் கண்ணூர் மாவட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் குற்றம் சாட்டப்பட்ட எம்.எல்.ஏ. அப்துல்லா குட்டியை அடித்து உதைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டவர் சரிதா நாயர். அவர் தன்னை கண்ணூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அப்துல்லா குட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக திருவனந்தபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில் சோலார் பேனல் தொழில் சம்பந்தமாக பேச வேண்டும் என்று கூறி தன்னை அப்துல்லா குட்டி நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்தார் என்றும், அங்கு சென்ற தன்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார் என்றும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். எனவே தனது புகார் தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சரிதா வலியுருத்தியிருந்தார்.
சரிதாவின் புகாரை ஏற்ற போலீசார் அப்துல்லா குட்டி எம்.எல்.ஏ. மீது பலாத்கார வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே பாலியல் புகாரில் சிக்கிய அப்துல்லா தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் அந்த கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனவே, இது தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த கண்ணூரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டல் ஒன்றிற்கு அப்துல்லா வந்திருந்தார். இந்த ஆலோசனைக் கூட்டம் பற்றி தகவல் அறிந்த கண்ணூர் மாவட்ட ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் பிஜூ, 25-க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் அந்த ஓட்டலை முற்றுகையிட்டார்.
பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்த முற்பட்டபோதும், மீறி உள்ளே நுழைந்த அவர்கள் அப்துல்லாவை சுற்றிவளைத்து சரமாரியாக தாக்கினார்கள். தன்னை காப்பாற்றி கொள்ள அப்துல்லா கெஞ்சினர். கையெடுத்துக் கும்பிட்டார். ஆனால், அதனைக் கண்டு கொள்ளாத அக்கும்பல் அவரை சரமாரியாக தாக்கியது.
இதை தடுக்க வந்த எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்களும் தாக்கப்பட்டனர். நிலைமை விபரீதமானதை உணர்ந்த போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அதிரடிப்படை போலீசாரை அங்கு வர வழைக்கப்பட்டனர்.
பின்னர் ஒருவழியாக அதிரடிப்படையினர் தடியடி நடத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் அப்துல்லாவை பத்திரமாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் சரிதா நாயர் மீது நிதி நிறுவனம் நடத்தி பணம் மோசடி செய்ததாக புதிய புகார் பதிவு செய்யப் பட்டுள்ளது. கொல்லத்தைச் சேர்ந்த ஜோதி (வயது 65) என்ற மாற்றுத் திறனாளி இந்தப் புகாரை அளித்துள்ளார். இதுபற்றி சரிதாநாயர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.