நீரவ் மோடியுடன் தொடர்புபடுத்தி நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு.. வழக்கு தொடர அபிஷேக் சிங்வி முடிவு
மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி மறுப்பு தெரிவித்துள்ளார்.
டெல்லி: மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி மறுப்பு தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ரூ.280 கோடி மோசடி மற்றும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மூலம் சுமார் ரூ.11,400 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக சி.பி.ஐ.யால் தேடப்படும் நகைக்கடை அதிபர் நீரவ் மோடி வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டார்.
அவருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளிட்ட நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஊழலில் சாதனை படைத்துள்ள காங்கிரஸ் வங்கி மோசடி குறித்து மத்திய அரசை குறை சொல்கிறது என்றார்.
பாஜக அரசு நடவடிக்கை
உண்மையில் நிரவ் மோடி வங்கியில் மோசடி செய்தது கடந்த 2011ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் தான். மோசடி விவகாரம் தெரிந்ததும் நீரவ் மோடி மீது பா.ஜ.க. அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.
நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு
மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.எம்.சிங்வியின் மனைவி அனிதா, நிரவ் மோடியின் நகைக்கடையுடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றின் இயக்குநராக உள்ளார் என்றும் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார்.
லீஸுக்கு கட்டடம் கொடுத்து
கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தை புரமோட் செய்ததும் அவர்கள்தான் என்றும் லீஸுக்கு கட்டடம் கொடுத்ததும் அவர்கள் தான் என்றும் குற்றம்சாட்டினார். நீரவ் மோடியின் நிறுவனத்துக்கு இயக்குநராக அவர்கள் இருந்துகொண்டு பாஜக மீது குற்றம்சாட்டுவதாகவும் தெரிவித்தார்.
நகைப்பு, கேலிக்குரியது
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஏஎம் சிங்வி, நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். பாதுகாப்பு அமைச்சரின் குற்றச்சாட்டு "நகைப்பிற்குரியதாகவும், கேலிக்குரியதாகவும்" உள்ளது என அவர் நிராகரித்துள்ளார். தானோ அல்லது தனது குடும்பத்தினரோ கீதாஞ்சலி ஜெம்ஸ் அல்லது நீரவ் மோடி நிறுவனங்களுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.
கமலா மில்ஸ் வாடகைதாரர்
தனது மனைவி மற்றும் மகன்கள் இயக்குநர்களாக இருந்த அட்வைட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான கமலா மில்ஸ் நிறுவனத்தின் வாடகைதாரராக நீரவ் மோடி நிறுவனம் இருந்ததாகவும் அவர் கூறினார். பல ஆண்டுகளுக்கு முன்னர் ஃபிரைஸ்டோன் வாடகைக்கு விடப்பட்டது என்றும் அதனுடன் தனது குடும்பத்தினருக்கோ அல்லது அட்வைட் நிறுவனத்துக்கோ தொடர்பில்லை என்றும் அவர் கூறினார்.
நிர்மலா சீதாராமனுக்கு மிரட்டல்
பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அவரது சக ஊழியர்களுக்கு எதிராக சிவில் மற்றும் அவதூறு வழக்கை தாக்கல் செய்யவுள்ளேன் என்றும் இதே செய்தியை பரப்பிய ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யவும் திட்டமிட்டுள்ளேன் என்றும் சிங்வி தெரிவித்தார்.