"ஆப் கி பார் மாற்றி மாற்றி பேசும் சர்க்கார்"- திக்விஜய்சிங் கிண்டல்
டெல்லி: ரயில் கட்டணத்தை உயர்த்தி, இரட்டை நிலைப்பாட்டை எடுத்துள்ளதன் மூலமாக, இந்த அரசு 'மாற்றி மாற்றி பேசும் சர்க்கார்' என்று தன்னை அழைத்துக்கொள்ளலாம் என்று காங்கிரசின் திக்விஜய்சிங் கிண்டல் செய்துள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான, திக்விஜய்சிங் கூறுகையில், 2012ல் ரயில் கட்டணத்தை உயர்த்தியபோது அப்போதைய பிரதமருக்கு நரேந்திரமோடி கடிதம் எழுதி கட்டண உயர்வை வாபஸ் பெறக்கேட்டார். அதில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்பாக, ரயில் கட்டணத்தை உயர்த்தி இந்த அரசு நாடாளுமன்றத்தை புறக்கணித்துவிட்டது என்றும் மோடி குற்றம் சாட்டியிருந்தார்.
இப்போது மோடி அரசு, பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பு ரயில் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதை 'ஆப் கி பார் டபுள் ஸ்பீக் சர்க்கார்' என்று அழைக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் 2012ல் ரயில் கட்டண உயர்வை விமர்சனம் செய்து பதிவிட்டதையும், திக்விஜய்சிங் தனது ட்விட்டரில் இணைத்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, பாஜக தனது தேர்தல் விளம்பரத்தில் 'ஆப் கி பார் மோடி சர்க்கார்' என்ற கோஷத்தை முன்வைத்தது. இந்த வாக்கியம் பெரும்பாலானோர் மனதில் எளிதாக பதிவானது. இதற்கு அர்த்தம், 'இந்த முறை மோடி அரசு' என்பதாகும். இதைத்தான், 'இந்த முறை மாற்றி மாற்றி பேசும் அரசு' என்று திக்விஜய்சிங் கிண்டல் செய்துள்ளார்.