மும்பையில் அபார்ஷன் செய்யும் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை 67% அதிகரிப்பு
மும்பை: 2014-2015ம் ஆண்டில் மும்பையில் கருகலைப்பு செய்து கொண்டுள்ள 15 வயதுக்குட்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை 67 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த 2013-2014ம் ஆண்டில் மும்பையில் கருகலைப்பு செய்தவர்களில் 111 பேர் 15 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். இந்நிலையில் இந்த எண்ணிக்கை 2014-2015ம் ஆண்டில் 185 ஆக அதிகரித்துள்ளது. அதாவது கருகலைப்பு செய்துள்ள 15 வயதுக்குட்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை 67 சதவீதம் அதிகரித்துள்ளது.
கருகலைப்பு செய்த 15 முதல் 19 வரை உள்ள பெண்களின் எண்ணிக்கையும் 47 சதவீதம் அதிகரித்துள்ளது.
அந்தேரி கிழக்கு
மும்பையில் அதுவும் அந்தேரி கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் தான் ஏராளமான கருகலைப்புகள் நடந்துள்ளன. அங்கு மட்டும் சுமார் 6 ஆயிரம் பேருக்கு கருகலைப்பு நடந்துள்ளது.
கர்ப்பம்
சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாலும், சிறு வயதில் திருமணம் செய்து கொடுப்பதாலும் கர்ப்பம் அடைந்து அந்த கருவை கலைப்பதாக கூறப்படுகிறது. பதின்வயதில் பெண்கள் கர்ப்பமாவது சாதாரணமாகிவிட்டது. பெரும்பாலானோர் யாருக்கும் தெரியாமல் கருவை கலைக்க முயற்சி செய்கிறார்கள் என மூத்த டாக்டர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சி
ஒருபக்கம் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள் அதிக அளவில் கருகலைப்பு செய்து கொண்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. மறுபக்கம் கருத்தடை மாத்திரை கேட்டு வரும் சிறுமிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று டாக்டர் சுசித்ரா பண்டிட் தெரிவித்துள்ளார்.
கருத்தடை
கருத்தடை மாத்திரைகள் வேலை செய்யாததால் தான் கர்ப்பமானதாக 30 ஆயிரத்தில் 23 ஆயிரம் பேர் தெரிவித்துள்ளனர். தாயின் உயிருக்கு ஆபத்து அல்லது குழந்தையின் வளர்ச்சி சரியில்லை ஆகிய காரணங்களால் பெண்கள் கருவை கலைக்கிறார்கள். குறைவான பெண்களே பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பமாகின்றனர்.
செக்ஸ்
பதின்வயதினர் அதிக அளவில் உடல் உறவு வைத்துக் கொள்கிறார்கள். எங்கு பார்த்தாலும் இது தான் நடக்கிறது. ஆனால் இது பற்றி யாரும் பேச விரும்பவில்லை என என்.ஜி.ஓ. ஒன்றின் தலைவர் நைரீன் தாருவாலா தெரிவித்துள்ளார்.