மே.வங்கம்:மமதா தளபதி பிகே வியூகம் தவிடுபொடி? அன்று சிங்கிள்..இன்று டிரிபிள் டிஜிட் இடங்களில் பாஜக?
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பான ஏபிபி- சிவோட்டர் சர்வே பாஜகவுக்கு பெரும் உற்சாகத்தையும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டாலும் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் கலக்கத்தையும் கொடுத்துள்ளது.
மேற்கு வங்கத்தின் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 148 இடங்கள்.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், மத்தியில் ஆளும் பாஜக, காங்கிரஸ்- இடதுசாரிகள் என மும்முனை போட்டி நிலவுகிறது. 2019 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ்-இடதுசாரி வாக்காளர்கள் அப்படியே பாஜகவுக்கு வாக்களித்ததால் அக்கட்சியால் அமோக இடங்களில் வெல்ல முடிந்தது. அப்போது காங்கிரஸ், இடதுசாரிகள் தனித்தனியாகப் போட்டியிட்டனர்.
ஆட்சியை தக்க வைக்கும் மமதா
இந்த நிலையில் ஏபிபி - சிவோட்டர் சர்வே முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் முதல்வர் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 158 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் 2011 சட்டசபை தேர்தலை ஒப்பிடுகையில் இது திரிணாமுல் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவுதான். 2016 தேர்தலில் 211 இடங்களில் வென்றிருந்த திரிணாமுல் காங்கிரஸ் இம்முறை 53 இடங்களை பறிகொடுக்கும் என்கிறது இந்த கருத்து கணிப்பு.
டிரிபிள் டிஜிட்
பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரையில் 102 இடங்களில் வெல்லும் வாய்ப்பு உள்ளது என்கிறது இக்கருத்து கணிப்பு. 2016 தேர்தலில் வெறும் 3 இடங்களில் வென்றிந்த பாஜக இப்போது டிரிபிள் டிஜிட் இடங்களை நோக்கி நகர்ந்திருப்பது மிகப் பெரிய வெற்றியாக கருதப்படும். ஆனால் மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரின் இடைவிடாத முற்றுகை பிரசாரங்களுக்கு மத்தியிலும் 102 இடங்கள்தான் கிடைக்கும் என்பது பாஜகவுக்கு ஒருவகை பின்னடைவு எனவும் சுட்டிக்காட்டுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
பிகே கணிப்பு பொய்?
இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, பிரசாந்த் கிஷோரை தேர்தல் வியூகத்துக்காக களமிறக்கி இருந்தார். மே.வங்கத்தில் பாஜகவால் டபுள் டிஜிட் இடங்களை நிச்சயம் தாண்ட முடியாது என திட்டவட்டமாக கூறி சவால் விட்டிருந்தார் பிகே. ஆனால் கருத்து கணிப்புகளோ பிகேவின் ஆரூடத்தை அடித்து நொறுக்கிவிடுவதாக இருக்கின்றன.
உருமாறிய காங். இடதுசாரிகள் வாக்குகள்
காங்கிரஸ்- இடதுசாரிகள் கூட்டணியால் 30 இடங்களில்தான் வெல்ல முடியும் என்கிறது சி வோட்டர் சர்வே. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க முடிந்த இடதுசாரிகளால் நிச்சயம் பரம எதிரியான திரிணாமுல் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க முடியாது. இதனால் பாஜக அல்லாத கட்சிகளின் வாக்குகள் நிச்சயம் சிதறிப் போவதை தடுக்க முடியாது. மற்றொன்று மேற்கு வங்கத்தில் இடதுசாரி, காங்கிரஸ் வாக்காளர்கள் எப்போதோ பாரத் மாதாகீ ஜே என ஜிந்தா பாத் கோஷங்களுக்கு முழுக்கும் போட்டுவிட்டனர். இதனால் சொற்ப இடங்களில்தான் காங்கிரஸ்-இடதுசாரிகளால் வெல்ல முடியும் என்கிற களநிலவரத்தை சொல்லி இருக்கிறது இந்த சர்வே முடிவுகள்.