உ.பி.யில் பாஜக ஆட்சி அமைக்க முடியாது.. மோடியைவிட அகிலேஷுக்கே ஆதரவு.. பரபரப்பு கருத்து கணிப்பு!
டெல்லி: உத்தரபிரதேசத்திலுள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக பொதுத் தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
ஏ.பி.பி நியூஸ் செய்தி சேனல்-லோக்நீதி சிஎஸ்டிஎஸ் போல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், உள்ளுக்குள் அடித்துக்கொண்டிருக்கும், ஆளும் சமாஜ்வாதி கட்சி 30 சதவீத வாக்கு வங்கியை கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
அந்த கட்சி 141 முதல் 151 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது. பாஜகவை பொறுத்தளவில் சமாஜ்வாதிக்கு பின்னால்தான் வருகிறது. அது சுமார் 27 சதவீத வாக்குவங்கியை ஈட்டும் என கூறப்படுகிறது. 124 முதல் 134 சீட்டுகள் பாஜகவுக்கு கிடைக்குமாம்.
மாயாவதி கட்சி
மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி 22 சதவீத வாக்கு வங்கியுடன், 93-103 வரையிலான தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளதாம். அதேநேரம், ராகுல் காந்தி, சோனியா காந்தி என காங்கிரஸ் முன்னணி தலைவர்களை எம்.பியாக்கி அழகு பார்த்த உ.பியில் அக்கட்சிக்கு 8 சதவீத வாக்கு வங்கிதான் உள்ளதாம். 13 முதல் 19 சீட்டுகள்தான் கிடைக்கும் என்கிறது கருத்து கணிப்பு. பிறர் 13 சதவீதம் அளவுக்கு வாக்குகளை அறுவடை செய்ய வாய்ப்புள்ளதாம். இது 6-12 சீட்டுகள் ஆகும்.
அகிலேஷுக்கு முதலிடம்
உத்தரபிரதேசத்தின் அடுத்த முதல்வராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு 28 சதவீத மக்கள் அகிலேஷுக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளனர். எனவே அவரே ரேஸில் முதலிடத்திலுள்ளார். 2வது இடத்தில் மாயாவதியும், மூன்றாவது இடத்தில் அகிலேஷ் தந்தை முலாயம் சிங் யாதவும் உள்ளனர்.
மோடியைவிட பெஸ்ட்
நரேந்திர மோடி அல்லது அகிலேஷ் யாதவ் இருவரில் யார் சிறந்த நிர்வாகி என கேட்கப்பட்ட கேள்விக்கு 34 சதவீதம் பேர் அகிலேஷுக்கு ஆதரவாகவும், 32 சதவீதம் பேர் மோடிக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம்கள் ஆதரவு
முஸ்லிம் வாக்காளர்களின் ஆதரவும் சமாஜ்வாதிக்கே உள்ளது. 54 சதவீத முஸ்லிம்கள் அக்கட்சிக்கு ஆதரவும், 14 சதவீத முஸ்லிம்கள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர். அயோத்தி பிரச்சினை நிலவும் உ.பியில், பாஜகவுக்கு 9 சதவீத முஸ்லிம்கள் ஆதரவு உள்ளதும் கவனிக்கத்தக்கது. ஆனால் காங்கிரசுக்கு 7 சதவீத முஸ்லிம்கள் ஆதரவுதான் உள்ளதாம்.
ஊரு ரெண்டுபட்டால்..
ஒருவேளை சமாஜ்வாதி கட்சி தந்தை-மகன் சண்டையால் உடைந்தால் பாஜக 168 தொகுதிகள் வரை வென்று தனிப்பெரும் கட்சியாக வர வாய்ப்புள்ளதாகவும் கருத்துக் கணிப்பு சுட்டிக்காட்டுகிறது. அந்த நிலை ஏற்பட்டால் பகுஜன் சமாஜ்கட்சி 120 சீட்டுகள் வரை வெல்லுமாம். அகிலேஷ் கோஷ்டிக்கு 92 சீட்டுகள் வரையிலும், முலாயம் சிங் கோஷ்டிக்கு 15 சீட்டுகள் வரையிலும் கிடைக்குமாம். காங்கிரசுக்கு 20 சீட்டுகள் வரை கிடைக்குமாம்.