பீகார் தேர்தல்: 2வது ஏபிபி -நீல்சன் கருத்துக் கணிப்பு .. பாஜக- ஐக்கிய ஜனதா தளம் இடையே மல்லுக்கட்டு
டெல்லி: பீகார் சட்டசபைத் தேர்தல் தொடர்பாக ஏபிபி நியூஸ் மற்றும் நீல்சன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி மற்றும் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கூட்டணிகளுக்கு இடையே கடும் மல்லுக்கட்டு நிலவுவது தெரிய வந்துள்ளது.
ஜூலை மாதத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் நிதீஷ் குமார் கூட்டணி 129 இடங்களை (மொத்தம் 243 இடங்கள்) பெறும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இரு தரப்பும் கிட்டத்தட்ட சம நிலைக்கு வந்து விட்டது.
2 மாதங்களுக்கு முன்பு 129
2 மாதங்களுக்கு இதே நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் நிதிஷ் கூமார் கூட்டணிக்கு 129 இடங்கள் கிடைக்கும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது 122 இடங்களே கிடைக்கும் என கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
பாஜகவுக்கு 118
பாஜக கூட்டணிக்கு 118 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த கருத்துக் கணிப்பை விட 6 இடங்கள் கூடுதலாகும். 122 இடங்கள்தான் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை பலமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ஆட்சியமைக்கும் நிதீஷ் குமார்
இதன் மூலம் ஆளும் கட்சியான நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. சுயேச்சைகளும், பிறரும் மொத்தமாக 3 இடங்களைப் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 கட்டங்களாக பீகார் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 8ம் தேதி முடிவுகள் வெளியாகும்.
43 சதவீத வாக்குகள் ஐக்கிய ஜனதாதளத்திற்கு
ஐக்கிய ஜனதாதளம் கூட்டணிக்கு 43 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது. கடந்த கருத்துக் கணிப்பிலும் இதே அளவிலான வாக்குகளையே அது பெற்றது.
பாஜக கூட்டணிக்கு 39 சதவீதம்
பாஜக கூட்டணிக்கு 39 சதவீத வாக்குகள் கிடைக்கும். கடந்த கருத்துக் கணிப்பை விட இது 7 சதவீதம் அதிகமாகும். பிற கட்சிகளுக்கு 18 சதவீத வாக்குகள் கிடைக்கும்.
கூட்டணிகளில் மாற்றம்
2010 சட்டசபைத் தேர்தலில் ஐக்கிய ஜனதாதளமும், பாஜகவும் கூட்டணி வைத்து 206 இடங்களை வென்றிருந்தன. லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி கூட்டணிக்கு 25 இடங்களே கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
லாலு இங்கே.. பாஸ்வான் அங்கே
அப்போது லாலுவுடன் கூட்டணி வைத்திருந்த ராம் விலாஸ் பாஸ்வான் இப்போது பாஜக பக்கம் போய் விட்டார். லாலுவோ, நிதீஷ் குமார் பக்கம் போய் விட்டார் என்பது சுவாரஸ்யமானது.
லோக்சபா தேர்தலில் வீசிய மோடி அலை
2015 லோக்சபா தேரத்லின்போது பாஜக, பாஸ்வான் உள்ளிட்டோர் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 174 சட்டசபைத் தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. அதேசமயம், நிதீஷ் குமார் தலைமையிலான கூட்டணிக்கு 51 சட்டசபைத் தொகுதிகளே கிடைத்தன என்பது நினைவிருக்கலாம். ஆனால் அப்போது வீசிய மோடி அலை இப்போது இல்லை என்பது முக்கியமானது.