உ.பி.யில் எதிரெதிர் துருவங்கள் இணைந்தால் பாஜகவுக்கு பின்னடைவுதான்- பரபரப்பு சர்வே #DeshKaMood
டெல்லி: உத்திரப்பிரதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாதி கட்சியும் இணைந்தால் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என ஏபிபி சர்வே கூறுகிறது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜகவும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸும் போராடி வருகின்றன.
உத்தரப்பிரதேசம் முக்கியமான மாநிலமாகும். இங்கு ஏற்கெனவே சமாஜவாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் ஆட்சியில் மாறி மாறி இருந்தன. இதையடுத்து கடந்த சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது.
ஒன்றிணைய தொடங்கிவிட்டன
இந்த தேர்தல் முடிவுகள் வரும் வரை அகிலேஷும், மாயாவதியும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்தவண்ணம் இருந்தனர். இந்நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்க்க இரு கட்சிகளும் ஒன்றிணைய தொடங்கிவிட்டன.
சர்வே
அகிலேஷ் யாதவும் பாஜகவை எதிர்க்க பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைக்க தயார் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் மக்களின் மனநிலை என்ற பெயரில் ஏபிபி செய்தி நிறுவனம் ஒரு சர்வேயை எடுத்துள்ளது. அதில் தேசிய ஜனநாயக கூட்டணி 70 இடங்களில் வெற்றி பெறும்.
எத்தனை இடங்கள்
காங்கிரஸ் கூட்டணி 2 இடங்களிலும் சமாஜ்வாதி கட்சி 4 இடங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி 4 இடங்களிலும் வெற்றி பெறும் என்று சர்வே கூறுகிறது. சமாஜவாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் தமிழகத்தில் அதிமுக- திமுகவை போல் பலம் வாய்ந்த கட்சிகளாகும்.
வெற்றி வாய்ப்புகள்
ஒரு வேளை இந்த இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டால் நிலைமை தலைகீழ்தான். அதாவது பாஜக கூட்டணி 31 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 5 இடங்களிலும் வெற்றி பெறும். சமாஜவாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் 44 இடங்களில் அமோக வெற்றி பெறும் என்று சர்வே முடிவுகள் கூறுகின்றன. இந்த வாய்ப்பை இரு கட்சிகளும் பயன்படுத்திக் கொள்வார்களா அல்லது தனித்தனியாக போட்டியிட்டு ஒற்றை இலக்கத்தில் தொகுதிகளை வெற்றி பெறுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.