கர்நாடகாவில் தொங்கு சட்டசபை.. தனிப்பெரும் கட்சியாக பாஜக வெல்லும்: ஏபிபி டிவி பரபரப்பு சர்வே
கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சியாக பாஜக வெற்றி பெற்றாலும் தொங்கு சட்டசபை அமைவதற்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஏபிபி சர்வே முடிவு கூறுகிறது.
Recommended Video
பெங்களூரு : கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியை விட அதிக இடங்களில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறும் என்று ஏபிபி நியூஸ் சர்வே முடிவு சொல்கிறது. பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் தொங்கு சட்டசபையே அமைய வாய்ப்பு இருப்பதாக சர்வே கூறுகிறது.
கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளில் எந்த கட்சியை ஆட்சியை பிடிக்கும் என்ற விறுவிறுப்பு அதிகரித்து வருகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சிக்கே ஆதரவு அதிகம் என்று ஒரு சில கருத்துக்கணிப்புகள் கூறிய நிலையில் ஏபிபி நியூஸ் தொலைக்காட்சியின் சர்வே முடிவு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 16ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. இந்நிலையில் நடக்க உள்ள தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக வெற்றி பெறும் என்று ஏபிபி சர்வே கூறுகிறது. பாஜக 89 முதல் 95 தொகுதிகளை வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும், காங்கிரஸ் 85 முதல் 91 தொகுதிகளை வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும் சர்வே கூறுகிறது. தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் 32 முதல் 38 தொகுதிகளை வெல்லும் என்றும் இதர கட்சியினர் 6 முதல் 12 தொகுதிகளை வெல்லக்கூடும் என்றும் கருத்துக்கணிப்பு சொல்கிறது.
224 உறுப்பினர் பலம் கொண்டது கர்நாடக சட்டசபை. ஆட்சியமைக்க குறைந்தது 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டியது அவசியம்.
எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் மதசார்பற்ற ஜனதா தளம் ஆதரவளிக்கும் கட்சியே ஆட்சியை பிடிக்கும் நிலை நிலவுகிறது.