ராஜஸ்தான், ம.பி, சட்டீஸ்கரில் பாஜகவிடமிருந்து ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ்.. 'ஏபிபி' பரபர சர்வே
டெல்லி: மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், ம.பி., ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் குறித்து ஏபிபி டிவி சேனல் சர்வே நடத்தி வெளியிிட்டுள்ளது.
இம்மூன்று மாநிலங்களிலமே பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் மூன்று மாநிலங்களிலும் பாஜகவிற்கு தோல்வி கிடைக்க உள்ளதாக கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
அதிலும் ராஜஸ்தானில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கருத்து கணிப்பு முடிவுகளை நீங்களும் பாருங்கள்.
[டோல் பிளாசா ஊழியர்களை போட்டு தாக்கிய பாஜக எம்பி, ஆதரவாளர்கள்! ]
ராஜஸ்தானில் அபாரம்
ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 சட்டசபை தொகுதிகளில் 142 தொகுதிகளை, காங்கிரஸ் வெல்லும் என்றும், பாஜகவிற்கு, வெறும் 56 தொகுதிகள்தான் கிடைக்கும் என்றும், பிறர், 2 தொகுதிகளை கைப்பற்றக்கூடும் என்றும் கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. இது காங்கிரஸ் கட்சியினருக்கு உற்சாகம் அளித்துள்ளது.
பாதி வாக்கு வங்கி
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியால் 50 சதவீத வாக்குகளை ஈர்க்க முடியுமாம். பாஜகவிற்கு 34 சதவீத வாக்கு வங்கி உள்ளது. பிறர் 16 சதவீத வாக்குகளை பெறக்கூடும் என்று இந்த கருத்து கணிப்பு ஆணித்தரமாக தெரிவிக்கிறது.
மத்திய பிரதேசத்தில் கடும் மோதல்
230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் கட்சி 122 தொகுதிகளையும், பாஜக 108 தொகுதிகளையும் வெல்லக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இங்கு போட்டி கொஞ்சம் கடினமாக இருக்கும் என்று தெரிகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 42.2 சதவீத வாக்குகளும், பாஜகவிற்கு 41.5 சதவீத வாக்குகளும் கிடைக்கலாம் என்பதால் வாக்கு சதவீதம் மிக நெருக்கத்தில் உள்ளது.
சட்டீஸ்கர் எளிதான வெற்றி
90 உறுப்பினர் பலம் கொண்ட சட்டீஸ்கரில் 47 தொகுதிகளை காங்கிரஸ் வெல்லும். 40 தொகுதிகளை பாஜக வெல்லும். பிறர் 3 தொகுதிகளை வெல்லக்கூடும் என்று தெரிகிறது. ஆனால் காங்கிரஸ் 38.9 சதவீத வாக்குகளையும், பாஜக 38.6 சதவீத வாக்குகளையும் பெறுமாம். வாக்கு சதவீதம் மிக நெருக்கமாக இருக்கிறது கவனிக்கத்தக்கது.