ஜம்மு காஷ்மீரின் 370-வது பிரிவு நீக்கத்தை வல்லபாய் பட்டேலுக்கு அர்ப்பணிக்கிறேன்: பிரதமர் மோடி
Recommended Video
அகமதாபாத்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு நீக்கப்பட்டதை சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு அர்ப்பணிக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் முன்னாள் துணை பிரதமரும் நாட்டின் முதலாவது உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் பட்டேலின் 144-வது பிறந்த நாள் உலக ஒற்றுமை தினம், ஒருமைப்பாட்டு தினமாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. குஜராத்தின் நர்மதை நதிக்கரை சாதுபெட் தீவில் உலகின் உயரமான பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். மேலும் ஒருமைப்பாட்டு தின உறுதிமொழியும் இந்நிகழ்ச்சியில் மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:
மகாராஷ்டிரா சட்டசபை சிவசேனா குழு தலைவராக ஏக்நாத் ஷிண்டே தேர்வு- சற்று நேரத்தில் ஆளுநருடன் சந்திப்பு
370வது பிரிவும் பயங்கரவாதமும்
ஜம்மு காஷ்மீரில் மட்டுமே அமலில் இருந்தது 370வது பிரிவு. ஆனால் இந்த 370வது பிரிவானது பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்துக்குதான் வழிவகுத்தது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தால் இதுவரை 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
பயங்கரவாதத்தில் இருந்து விடுவிப்பு
70 ஆண்டுகளுக்கு மேலாக 370 மற்றும் 35A பிரிவுகள் அமலில் இருந்தன. இந்த பிரிவுகள் மீது யாருமே கை வைக்க கூட யோசிக்கவில்லை. 130 கோடி இந்தியர்களாகிய நாம் தேசத்துக்கு எதிரான சக்திகளை எதிர்த்து ஒற்றுமையுடன் போராட வேண்டும். அதுதான் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும். ஜம்மு காஷ்மீருக்கான 370வது பிரிவை ரத்து செய்து அம்மாநிலத்தை பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து விடுவித்திருக்கிறோம்.
பட்டேலுக்கு சமர்ப்பனம்
தற்போது அந்த 370-வது பிரிவு நீக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சர்தார் வல்லபாய் பட்டேலின் கனவை நினைவாக்கி இருக்கிறோம். கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி 370-வது பிரிவை நீக்குவது என எடுத்த முடிவினை சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு அவரது பிறந்த நாளான இன்று அர்ப்பணிக்கிறேன். இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாள் முதல் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் வளர்ச்சியை நோக்கி பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி முன்னேறி செல்கின்றன.
7வது ஊதிய குழு பரிந்துரைகள்
இதர யூனியன் பிரதேசங்களுக்கான அத்தனை வசதிகளும் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும் கிடைக்கும் என உறுதி அளித்திருந்தோம். இப்போது 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேச அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
வடகிழக்கு மாநிலங்கள்
இதேபோல் வடகிழக்கு மாநிலங்களுக்கும் நாட்டின் பிற பகுதிகளுக்குமான இணக்கம் என்பது பல ஆண்டுகளாக கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. தற்போது அந்த நிலைமை மாற்றப்பட்டிருக்கிறது. பல்லாண்டுகாலமாக நீடித்து வந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகள் காணப்பட்டிருக்கின்றன.
எதிரிகளுக்கு மிகப்பெரிய சவால்
இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் நமது நாட்டின் எதிரிகளுக்கு மிகப் பெரிய சவால். நம்மை பிரிக்க நினைத்தவர்கள் வெல்ல முடியாமல் போனார்கள். அவர்கள் நமது வேற்றுமையில் ஒற்றுமை என்பதை கேள்விக்குள்ளாக்க முயற்சித்தார்கள். இத்தனை ஆண்டுகளாகியும் அவர்களது முயற்சிகள் வெல்ல முடியாமல் போனது என்பதை மறந்துவிட்டார்கள்.
|
தேசத்தின் பெருமிதமும் பலமும்
வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் பெருமிதமும் பலமுமாகும். இன்று உலகின் நிதிசார் வல்லரசுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்திருக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.