என்ன கொடுமை சார்.. கோஷம் போடாதீங்கன்னு சொன்னது ஒரு குத்தமா?
மாணவர்களின் காலில் விழுந்து பேராசிரியர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
போபால்: கோஷமிடக்கூடாது என்று சொன்னது ஒரு குத்தமா? அதற்காக ஒரு பேராசிரியரை படிக்கும் மாணவர்கள் தங்கள் காலில் விழ வைக்கும் அதிர்ச்சியும் அவமானமும் நிறைந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
தட்சணை கொடுத்து கல்வி கற்ற காலம் அன்று இருந்தது. ஆனால் சமீபகாலமாக ஆசிரியர்களை பற்றி புறம் கூறுதல், ஆசிரியர்களின் உருவத்தை வைத்து உருவகப்படுத்தி கிண்டல் கேலி செய்தல், மற்றவர்களிடம் தவறான அபிப்பிராயத்தை உருவாக்கி விடுதல் போன்றவைகளில் ஒரு சில மாணவர்கள் ஈடுபட்டு வருவதுடன், ஆசிரியர்-மாணவர்கள் என்ற ஆழமான உறவுகளையும் அசைத்து பார்க்க தொடங்கிவிட்டனர். இப்போது நிலைமையோ இன்னும் படுமோசமாகி விட்டது. மத்திய பிரதேசம், மாண்டசூர் பகுதியில் நடந்த செயல் நம்மை வெட்கி தலைகுனிய வைத்துள்ளது.
கோரிக்கை மனு
இங்கு ராஜீவ் காந்தி முதுகலை அரசுக் கல்லூரி இயங்கி வருகிறது. கடந்த புதன்கிழமையன்று இங்கு படிக்கும் ஏபிவிபி மாணவர்களுக்கு பிஎஸ்சி 4-ம் பருவ தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்காக கல்லூரி முதல்வரிடம் கோரிக்கை மனு கொடுக்க மாணவர்கள் முடிவெடுத்தனர். அதன்படி, முதல்வரின் அறையை நோக்கி கோஷமிட்டுக்கொண்டே சென்றனர்.
கோஷம் போட வேண்டாம்
அந்த நேரம் பார்த்து, பேராசிரியர் தினேஷ் குப்தா என்பவர் தனது வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மாணவர்கள் முதல்வர் அறைக்கு செல்வதைவிட்டு தினேஷ்குப்தா வகுப்பறைக்கு வெளியே நின்று சத்தமாக கோஷமிட்டனர். மாணவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் போடாமல், பாரத் மாதா கீ ஜே, வந்தே மாதரம் உள்ளிட்ட கோஷங்களையும் எழுப்பினர். அப்போது பேராசிரியர் தினேஷ் மாணவர்களிடம் "கோஷம் போடாதீங்கப்பா, என்னால பாடம் நடத்த முடியல" என்றார்.
பாரத் மாதா கீ ஜே
இதைக்கேட்ட அந்த ஏபிவிபி மாணவர்கள், "நாங்கள் யார் தெரியுமா? பாரத் மாதா கீ ஜே', 'வந்தே மாதரம்' போன்ற கோஷங்களை நிறுத்த சொல்கிற இந்த பேராசிரியர் தினேஷ் ஒரு தேச துரோகி, நீ தேச விரோதி என போலீசில் புகார் கொடுத்து உள்ளே தூக்கி வைத்துவிடுவோம்" என்று சத்தமிட்டார்கள். மேலும் இப்படிப்பட்ட ஒரு தேச துரோகி, மன்னிப்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் முழக்கமிட்டார்கள்.
வீடியோ வைரலாகிறது
இதனால் அதிர்ச்சி அடைந்த பேராசிரியர் தினேஷ், கோஷமிட்ட மாணவர்களின் தனித்தனியாக மன்னிப்பு காலில் விழுந்து மன்னிப்பு கேட்க தொடங்கினார். இதை மாணவர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவேயில்லை. ஆசிரியர் காலில் விழும் சமயத்தில் மாணவர்கள் அவரை தடுத்தனர். ஆனாலும் ஆசிரியர் ஒவ்வொருத்தர் காலிலும் விழுந்து கொண்டே இருந்தார். இதனால் சில மாணவர்கள் காலில் விழும் சமயத்தில் மெல்ல விலகி நின்றனர். பேராசிரியர் காலில் விழும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்க்கும் அனைவருமே அதிர்ச்சியில் உறைகின்றனர்.
ஆயிரம் முறை முழக்கமிடுவேன்
கல்லூரி வளாகம் முழுவதும் இந்த சம்பவத்தால் அதிர்ந்தது. மறுநாள் பேராசிரியர் தினேஷ் கல்லூரிக்கு வரவேயில்லை. 3 நாள் லீவு போட்டுவிட்டு சென்றுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதை தவிர பேராசிரியர் தினேஷ் பேசும் மற்றொரு வீடியோவும் வேகமாக பரவி வருகிறது. அதில், ''ஏபிவிபி போராளிகளை விட எனக்கு அதிகமாகவே நாட்டுப்பற்று உள்ளது. தேசபக்தி மிகுந்த கோஷங்களை ஒருமுறை அல்ல, ஆயிரம் முறை முழக்கமிடுவேன். ஆனால் அவர்களை போல அல்ல'' என்று தெரிவித்துள்ளார் தினேஷ்.
வெற்றுக்கூச்சல்கள்
ஏபிவிபியின் இந்த அராஜகத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் குவிந்து வருகிறது. ஏபிவிபி என்பதன் விரிவாக்கம் அகில பாரத வித்தியார்த்தி பரிஷத் என்பதுதான். இது ஆர்.எஸ்.எஸ்-இன் மாணவர் அமைப்பு ஆகும். படிப்பு கற்று தரும் பேராசிரியர் இப்படி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டிருப்பார் என்றால் அவர் எந்த அளவுக்கு மனம் வருந்தி, புண்பட்டிருப்பார் என தெரியவில்லை. வெற்றுக்கூச்சல்களை எழுப்பி சமூக ஒழுக்கங்களை சீர்குலைத்து வரும் இதுபோன்ற மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்!