தேர்தல்களில் படுதோல்வி எதிரொலி... டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக போராடும் பாஜக மாணவர் அமைப்பு
தேர்தல்களில் படுதோல்வியைத் தொடர்ந்து தற்போது மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராட களத்துக்கு வந்துள்ளது சங்க பரிவாரங்களின் மாணவர் அமைப்பான ஏபிவிபி.
டெல்லி: நாடு முழுவதும் பல்கலைக் கழகங்களில் நடைபெறும் தேர்தல்களில் படுதோல்வியைத் தழுவி வரும் நிலையில் வேறுவழியே இல்லாமல் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு எதிராக போராடுவதாக சங்க பரிவாரங்களின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. அறிவித்திருக்கிறது.
டெல்லி பல்கலைக் கழகம், டெல்லி ஜவஹர்லால் நேரும் பல்கலைக் கழகம், ஹைதராபாத் பல்கலைக் கழகம், குவஹாத்தி மற்றும் பஞ்சாப் பல்கலைக் கழகங்களில் நடைபெற்ற மாணவர் அமைப்புகளின் தேர்தலில் ஏ.பி.வி.பி. படுதோல்வியைத் தழுவியது. மத்தியில் பாஜக ஆட்சி இருப்பதால் மாணவர் அமைப்புகளை கைப்பற்றலாம் என்கிற ஏபிவிபியின் முயற்சியில் மண்தான் விழுந்தது.
இந்த நிலையில் பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் மாணவிகளை மிக கொடூரமாக போலீசார் தாக்கியுள்ளனர். இந்த அட்டூழிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
இதனிடையே மாணவர்களிடையே நல்ல பெயரை எடுக்க மத்திய பாஜக அரசுக்கு எதிராக டெல்லியில் போராடப் போவதாக ஏபிவிபி அறிவித்திருக்கிறது. மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் நீதி கோரி போராடப் போவதாக ஏபிவிபி அறிவித்திருக்கிறது.
அதேநேரத்தில் மாணவிகளை கொலைவெறியுடன் தாக்கிய உபியில் ஆளும் பாஜக அரசையோ, அதன் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸையோ கிஞ்சித்தும் விமர்சிக்காமல் வாய்மூடி மவுனியாகவே ஏபிவிபி இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது