அலகாபாத் பல்கலை.யில் மூத்த பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜனை சிறைபிடித்த ஏ.பி.வி.பி.
அலகாபாத்: உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத் பல்கலைக் கழகத்தில் பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யால் மூத்த பத்திரிகையாளரான சித்தார்த் வரதராஜன் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்து நாளிதழின் ஆசிரியராக இருந்தவர் சித்தார்த் வரதராஜன். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலை அவர் தமது எழுத்துகளில் வெளிப்படுத்தியவர். இதனால் வலதுசாரிகள் அவரை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் அலகாபாத் பல்கலைக் கழக மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் உரையாற்றுவதற்காக சித்தார்த் வரதராஜன் சென்றிருந்தார். ஆனால் பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி., சித்தார்த் வரதராஜனை பல்கலைக் கழகத்துக்குள் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தியது.
சித்தார்த் வரதராஜன் ஒரு நக்சல் ஆதரவாளர்; தேசவிரோத சக்திகளை ஆதரிப்பவர்.. அவரை பல்கலைக் கழகத்துக்குள் பேசுவதற்கு அனுமதிக்கக் கூடாது என அவர்கள் வலியுறுத்திருந்தனர். இதனால் அலகாபாத் பல்கலைக் கழகத்துக்கு வெளியே ஸ்வராஜ் பவன் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சித்தார்த் வரதராஜன் கலந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அலகாபாத் பல்கலைக் கழக துணைவேந்தர் ஆர்.எல். ஹாங்லூவை சந்திக்க சித்தார்த் வரதராஜன் சென்றார். அப்போது அவரை சூழ்ந்து கொண்ட ஏ.பி.வி.பி. இயக்கத்தினர் முழக்கங்களை எழுப்பினர். இதனால் அவர் எங்கும் நகர முடியாத நிலைக்கு சுமார் அரை மணிநேரம் சிறைபிடிக்கப்பட்டவராக எந்த நேரத்திலும் தாக்கப்படும் நிலையில் சிக்கிக் கொண்டார்.
இதன் பின்னர் போலீசார் வரவழைக்கப்பட்டு சித்தார்த் வரதராஜன் மீட்கப்பட்டு வெளியே செல்ல முடிந்தது. மூத்த பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜனை இந்துத்துவா அமைப்பினர் சிறைபிடித்தது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.