டெல்லி பல்கலைக் கழக மாணவர் சங்க தேர்தலில் மீண்டும் வென்றது பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பு ஏ.பி.வி.பி.!
டெல்லி: டெல்லி பல்கலைக் கழக மாணவர் சங்கத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்தி பரிஷத் ( ஏ.பி.வி.பி.) அபார வெற்றி பெற்றுள்ளது. ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தேர்தலில் இணைச் செயலர் பதவியையும் ஏ.பி.வி.பி. கைப்பற்றியுள்ளது.
டெல்லி பல்கலைக் கழக மாணவர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன் தினம் எண்ணப்பட்டன. இதில் ஏ.பி.வி.பி.யினரே தலைவர், துணைத் தலைவர், செயலர், இணை செயலர் பதவிகளைக் கைப்பற்றினர்.
தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சதேந்தர் அவானா, காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான என்.ஐ.யூ.ஐ.வின் பிரதீப் விஜரானை 6,327 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் ஏ.பி.வி.பி.யின் சன்னி தேதா, ஆம் ஆத்மியின் மாணவர் அமைப்பான சி.ஒய்.எஸ்.எஸ்.-ன் கரீமா ரானைவை 7,750 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்ஹ்டார்.
செயலர் பதவிக்கான தேர்தலில் ஏ.பி.வி.பி.யின் அஞ்சலி ராணா, என்.எஸ்.யூ.ஐ.-வின் அமித் சேராவத்தை 4,665 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
ஜே.என்.யூ
இதேபோல் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக (ஜே.என்.யூ) மாணவர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இந்த வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் இடதுசாரிகள் மாணவர் அமைப்பான ஏ.ஐ.எஸ்.ஏ தலைவர், துணைத் தலைவர், பொதுச்செயலர் பதவியை கைப்பற்றியது.
ஆனால் இணைச் செயலர் பதவியை பாரதிய ஜனதாவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி கைப்பற்றியுள்ளது. 28 வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.பி.வி.பி. வேட்பாளர் வென்றார். சுமார் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜே.என்.யூ. மாணவர் சங்க நிர்வாகத்தில் ஏ.பி.வி.பி. காலடி வைத்துள்ளது.
டெல்லி பல்கலைக் கழகம் மற்றும் ஜே. என். யூ. பல்கலைக் கழக மாணவர் சங்கத் தேர்தலில் வென்ற ஏ.பி.வி.பி. பிரதிநிதிகளுக்கு பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வாழ்த்து செய்தியில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கொள்கைகளுக்கு இளைஞர் சமூகம் அளித்துள்ள அங்கீகாரமே இத்தேர்தல் முடிவு. டெல்லி பல்கலைக் கழகம், ஜே.என்.யூ. போன்றவை இந்திய மாணவர் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மினி இந்தியா என்றார்.