கேரளாவில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி
கொழிஞ்சாம்பாறை: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் காவநாடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவரது மனைவி தங்கம்மாள். இவர்களது மகன் மோகனன் .
மோகனனின் மகன் மனு , இவர்களும், இவர்களது உறவினர்கள் குஞ்சுமோன், அம்பிகா, சரஸ்வதி ஆகியோர் குருவாயூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய காரில் புறப்பட்டனர்.
காரை மோகனன் ஓட்டினார். பரவூர் ரோடு துரத்திக்புரம் என்ற இடத்தில் வந்தபோது எதிரே மைசூரில் இருந்து கொச்சிக்கு டீ தூள் ஏற்றிய லாரி வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதியது. மோதிய வேகத்தில் கார் லாரிக்கு அடியில் சிக்கியது.
காரில் இருந்தவர்கள் அலறி சத்தம் போட்டனர். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து லாரிக்கு அடியில் சிக்கிய குஞ்சுமோன், அம்பிகா, சரஸ்வதி ஆகியோரை மீட்டு பரவூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இடிபாடுகளில் சிக்கிய மற்றவர்களை மீட்க முடியவில்லை. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் தீயணைப்பு படையினரோடு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
லாரிக்கு அடியில் சிக்கி நொறுங்கிய காரை மீட்டு பார்த்தபோது தங்கம்மாள், அவரது பேரன் மனு ஆகியோர் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.
மோகனன் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மோகனன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பரவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விபத்தில் பலியான சம்பவம் காவநாடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.