உயிருக்கு போராடியவரை போட்டோ, வீடியோ எடுத்த மக்கள்... மரத்துப் போனதா மனித நேயம்?
சாலையில் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடியவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் பொதுமக்கள், போட்டோ, வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புனே: மகாராஷ்டிராவில் விபத்தில் சிக்கி ரத்தக்காயங்களோடு உயிருக்குப் போராடிய நபரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லாமல், சுற்றி நின்று வீடியோ மற்றும் போட்டோ எடுத்துள்ளனர். அந்த அளவுக்கு செல்போன் மோகத்தில் மக்கள் சிக்கியுள்ளனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் போஷாரி பகுதியில், நேற்று அடையாளம் தெரியாத கார் ஒன்று மோதியதில் சதிஷ் பிரபாகர் என்ற இளைஞர் பிரபாகர் பலத்த காயமடைந்தார். பின்னர், உயிருக்கு போராடியபடி விபத்தான இடத்திலேயே சாலையில் கிடந்தார்.
இந்தக் கோர விபத்தை நேரில் பார்த்த மக்கள், ரத்தவெள்ளத்தில் கிடக்கும் பிரபாகரை சுற்றி சூழ்ந்து நின்றுகொண்டு, தங்களின் மொபைல் போன்களில் போட்டோ வீடியோ எடுத்தபடி இருந்தனர். ரத்தவெள்ளத்தில் கிடப்பவரை பற்றி கமெண்ட் அடித்தபடி இருந்த மக்கள் அவரைக் காப்பாற்ற முன்வரவில்லை
மரத்துப்போன மனித நேயம்
யாரும் அடிபட்ட பிரபாகரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லலாம் என்று நினைக்கவேயில்லை என்றும், போட்டோ வீடியோ எடுப்பதில் மட்டும் குறியாக மனிதநேயம் இல்லாதவராக இருந்துள்ளனர் என்று நேரில் பார்த்த நபர் தெரிவித்துள்ளார்.
காப்பாற்ற முயன்ற மருத்துவர்
இதனிடையே, அந்த வழியாக சென்ற கார்த்திக்ராஜ் கதே என்ற பல் மருத்துவர், பிரபாகரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது போகும் வழியில் அவர், உயிருக்குப் போராடிய பிரபாகருக்கு, முதல் உதவி சிகிச்சை அளித்தார்.
பரிதாப மரணம்
இருப்பினும் சிறிது நேரத்தில் பிரபாகர் பரிதாபமாக மரணமடைந்தார். மருத்துவமனையில் சோதித்த டாக்டர்களும் மரணத்தை உறுதி செய்தனர். இதில் மிகவும் உடைந்து போனார் மருத்துவர் கார்த்திக்ராஜ் கதே.
பொதுமக்கள் கூட்டம்
இந்த சோக சம்பவம் குறித்து கூறியுள்ள கார்த்திக்ராஜ் கதே," நேற்று மாலை 6.30 மணியளவில் போஷாரியின் இந்திராநகர் கார்னர் பகுதி வழியாக சென்ற போது, பொதுமக்கள் கூட்டமாக இருப்பதைப் பார்த்தேன். அங்கு சென்று பார்த்த போது, அடிபட்டு கிடந்த பிரபாகர் ரத்த வெள்ளத்தில் இருந்தார். ஆனாலும் அவர் சுயநினைவுடன்தான் இருந்தார்.
மொபைல் பைத்தியங்கள்
அப்போது அவர் தனது கை, கால்களை அசைத்தவாறு இருந்தார். அதனைக்கண்ட மக்கள், தங்களது மொபைலில் போட்டோ, வீடியோ எடுத்தனர். உதவிக்கு ஒருவர் கூட முன்வரவில்லை." என்று தெரிவித்துள்ளார் அதிர்ச்சியோடு.