For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'பாஜக' பிரதமரை கூட்டாக சந்தித்த கேரள 'காங்கிரஸ்' முதல்வரும், 'சிபிஎம்' எதிர்க்கட்சித் தலைவரும்!

Google Oneindia Tamil News

டெல்லி: கேரளத்தைப் பார்த்து நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். மாநிலப் பிரச்சினை என்றால் அத்தனை பேரும் ஒன்று கூடி விடுகிறார்கள். அதிலும் உச்சமாக நமது மாநிலத்தில் நினைத்துக் கூட பார்த்திராத வகையில், கேரள முதல்வரும், அம்மாநில எதிர்க்கட்சித் தலைவரும் ஒன்றாக இணைந்து சென்று பிரதமர் நரேந்திர மோடியைப் பார்த்து முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து விட்டு வந்துள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் கேரளாவுக்கு சாதகமாக நடக்குமாறு இருவரும் பிரதமரைக் கேட்டுக் கொண்டு வந்துள்ளனர். இந்த சந்திப்பு குறித்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி தனது பேஸ்புக்கிலும் படத்துடன் போட்டு ஷேர் செய்துள்ளார்.

Achuthanandan, Chandy urge PM to intervene

முதல்வர் உம்மன் சாண்டியும், எதிர்க்கட்சித் தலைவரான முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனும் இணைந்து சென்று பிரதமரைச் சந்தித்தது கேரள அரசியல் வரலாற்றில் அரிதானது என்றாலும் கூட அங்குள்ள கட்சிகள் அனைத்தும் இந்த விவகாரத்தில் மிகவும் நெருக்கமாக, ஒற்றுமையாக, ஒன்றாக உள்ளன என்பதில் ஆச்சரியம் இல்லை.

இரு தலைவர்களும் பிரதமரிடம் ஒரு மனு அளித்தனர். அதில், முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும். அணையின் நீர்மட்டத்தை 136 அடி வரை மட்டுமே தேக்கி வைக்க தமிழ்நாட்டை வலியுறுத்த வேண்டும். கேரள மக்களின் உயிர் மற்றும் உடமைகளுக்கு பாதுகாப்பு வழங்குவதுடன், தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு புதிய அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதியை பெற்றுத்தர வேண்டும். புதிய அணை கட்டும் வரை தமிழக அரசு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக நிலை நிறுத்தி வர வேண்டும் என்றும் அதில் கூறியிருந்தனர்.

அதை விட முக்கியமாக முல்லைப் பெரியாறு அணையின் கண்காணிப்புக் குழு மற்றும் மத்திய நீர் ஆணையம் ஆகியவை கேரளாவுக்கு சாதகமாக நடக்குமாறு பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது கிட்டத்தட்ட அப்பட்டமாக தமிழகத்திற்கு எதிராக நடக்குமாறு பிரதமரை கேரளா வற்புறுத்துவது போல அமைந்துள்ளது.

அதேபோல நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ஆகியோரையும் சந்தித்த இருவரும் தங்களது மாநிலக் கோரிக்கைகளை அவர்களிடம் வைத்து மனு கொடுத்தனர்.

பிரதமரை கேரள குழு பார்த்தது ஏன்?

தமிழகத்தில் தற்போது உள்ள அதிமுக அரசு, "சில பல" காரணங்களால் மோடி அரசை அதிகமாக விமர்சிக்காமல் உள்ளது. மோடி அரசுடன் இணக்கமாக செல்லவும் முயற்சிக்கிறது. பாஜகவை அது திட்டுவதில்லை. மோடியைத் திட்டுவதில்லை. இதையெல்லாம் உணர்ந்து, இதன் சூட்சுமத்தைப் புரிந்து கொண்டு மோடி மூலமாக தமிழகத்தின் அதிமுக அரசுக்கு நெருக்குதல் கொடுக்க கேரளத்தினர் முயல்வதையே இது காட்டுவதாக தெரிகிறது.

எப்படியோ தமிழகத்தில் எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் செய்யாததை, கருணாநிதியும் ஜெயலலிதாவும் செய்யாததை, ஓ.பன்னீர் செல்வமும், விஜயகாந்த்தும் செய்யாததை கேரளாவில் உம்மன் சாண்டியும், அச்சுதானந்தனும் செய்துள்ளது கேரள மக்களுக்கு உண்மையிலேயே பெருமையான விஷயம்தான்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பே இறுதியானது, இந்த விவகாரத்தில் தலையிடக் கூடாது, கேரளாவுக்கு சாதகமாக நடக்கக் கூடாது என்று பிரதமரை நேரில் சந்தித்து முதல்வர் ஓ.பன்னீர் செல்மும், விஜயகாந்த்தும் வலியுறுத்தி விட்டு வந்தால் நிச்சயம் தமிழக மக்களும் சந்தோஷமடைவார்கள்.. ஆனால் அப்படியெல்லாம் செல்ல அவர்களுக்கு எங்கே நேரம் இருக்கப் போகிறது!

English summary
In a rare move, Kerala Chief Minister Oommen Chandy and leader of the opposition V S Achuthanandan jointly met Prime Minister Narendra Modi on Tuesday and urged him to intervene in the Mullaiperiyar dam issue. They want him to impress upon Tamil Nadu to ensure that the storage level of the more than a century old dam is maintained at around 136 feet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X