ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்.. கரம்பிடித்த மருத்துவ பணியாளர்.. ஒடிசாவில் ஸ்வீட் காதலர் தினம்
ஒடிசாவில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் நடந்து இருக்கிறது.
Recommended Video
புபனேஷ்வர்: ஒடிசாவில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் நடந்து இருக்கிறது. பிரமோதினி ரவுல் என்ற அந்தப் பெண்ணை காதலித்த சரோஜ் சாஹு என்ற நபர் கரம் பிடித்து இருக்கிறார்.
இவர்கள் காதல் கதை இதயத்தை உருக்கும் வகையில் இருக்கிறது. இந்தப் பெண் கடந்த ஏப்ரல் 18, 2009 அன்று ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டார்.
தற்போது அந்தக் குற்றவாளிக்கு தண்டனைக் கிடைத்து இருக்கிறது. பிரமோதினிக்கு இன்னும் பார்வையில் பிரச்சனை இருப்பதாகக் கூறப்படுகிறது.
நடந்தது என்ன
பிரமோதினி ரவுல் 16 வயது இருக்கும் போது, ஏப்ரல் 18, 2009 அன்று ஆசிட் வீச்சால் தாக்கப்பட்டார். இவரை ஒருதலையாக காதலித்த சந்தோஷ் என்பவர் பிரமோதினி மீது ஆசிட் வீசினார். சந்தோஷ் பாராமிலிட்டரி படையில் வேலை பார்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிகிச்சை
இவர் முகம் முழுக்க இதனால் பாதிக்கப்பட்டது. அதேபோல் பார்வையும் 50 சதவிகிதம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இவர் முதலில் கட்டாக்கில் கண்ணுக்குச் சிகிச்சை எடுத்தும் சரியாகாமல் இருந்துள்ளது. இப்போது அடுத்த அறுவை சிகிச்சை செய்து ஒரு கண் மூலம் மட்டும் பார்க்கும் திறனைப் பெற்று இருக்கிறார்.
காதல் மலர்ந்தது
இரண்டாவது முறையாகச் சிகிச்சை எடுத்துக் கொண்ட போது அந்த மருத்துவமனைக்கு சரோஜ் சாஹு என்ற நபர் வந்து சென்றுள்ளார். அங்கு மருந்து விற்பனை செய்ய அவர் அடிக்கடி வந்துள்ளார். அப்போது பிரமோதினியை பார்த்துக் காதலில் விழுந்துள்ளார். அப்போதே அவரிடம் காதலையும் சொல்லி இருக்கிறார்.
சேர்ந்தனர்
பிரமோதினி சில நாட்கள் கழித்து காதலை ஒப்புக் கொண்டு இருக்கிறார். இவர் காதல் சொல்வார் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை என்று பிரமோதினி பேட்டி அளித்துள்ளார். அவர் வந்த பின் வாழ்க்கையே மாறிவிட்டது என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
நிச்சயதார்த்தம்
தற்போது இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது. காதலர் தினம் அன்று நிச்சயம் செய்ய வேண்டும் என்று பொறுத்திருந்து விழாவை நடத்தி இருக்கிறார்கள். பிரமோதினி வேலை பார்க்கும் 'ஷெரோஸ் ஹேங்கவுட் கஃபேவில்' இந்த விழா நடந்துள்ளது. அங்கு இன்னும் பல ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.